Monday, April 28, 2008

தமிழ்த் தாத்தா....

UVS_Iyer
Picture Courtesy: Wikepedia

”தொன்மொழிகளின் தேவாலயம்”
எனப் போற்றப்படும்
செம்மொழியாம் தமிழை....
மாறா வனப்புடைய
தங்கச் சிமிழை...

காலம் சில நாள்
கறையானே காவலாய்
குடி வைத்தது !!
அது ஒருவரது
உள்ளத்தை அறவே
தைத்தது !!

தில்லை முதல்
நெல்லை வரை
எல்லையில்லாது....
எடுப்பார்
தொல்லையில்லாது....

பல மூலையில்
பனை ஓலையில்

இருந்தன
பல சுவடிகள்
கேட்பாரற்று !!
இரண்டாம் பட்சமானது
தமிழ்ப் பற்று !!
காரணம் புற்று !!

சங்கம் வளர்த்த தமிழ்
அங்கம் சிதைவதை
பங்கம் அடைவதை

முடியவில்லை ஒரு
தாத்தாவால் தாங்க..
மேலும் கீழும்
மூச்சு வாங்க....

அங்கிங்கெனாது
எங்கெங்கும் சென்று...
பல நாள்
வெறும் காற்றையே
மென்று....

ஓலை தேடுவதே
வேலையாய்...

கண்டெடுத்தார்
காணக்கிடைக்கா
காப்பியங்களை
அத் தாதை..
தமிழின் மீது
தாளாப் பற்றுடைய
மா மேதை !!

அவரின்றி..
கிடைத்திருக்குமா நமக்கு
எட்டுத் தொகையும் ?
ஈடாகுமா அதற்கு
எத் தொகையும் ?

அவர் சிரமத்தை
அவர் கண்டெடுத்த
பதினெண் கீழ் கணக்கும்
பத்துப் பாட்டும்
என்றும் காட்டும்
தமிழ் தரணியிலுள்ள வரை
அவர் பெருமையை
நிலை நாட்டும்...

28/04
”தா ! தா !” என
தமிழைச் சேர்த்த
” தமிழ்த் தாத்தா”
உ வே சா
நினைவு தினம்...
தமிழனே..
நினை நீ அவரை
தினம்....

மொத்தத்தில்...
கவலைக் களை காணின்
அதனைக் களை என
தமிழ் தேடுகிறது சில
தாத்தாக்களை...

தமிழை மீட்டார்
அந்தத் தாத்தா !!
தமிழனை மீட்பாரா
இன்றைய தாத்தா?

Labels: , , , , ,

Friday, April 18, 2008

ஈழம் - 02

நண்பர்களே !!
நிலம் மாறி
நடப்பட்ட
பண்பர்களே !!

ஏ தமிழ் ஈழமே !!
யாமறிவோம் உமது
நட்பின் ஆழமே !!

விடு
நாட்டுக்கு நடுவே
கோடு போடும்
அறிவினை !!
தேவையா மற்றொரு
பிரிவினை?

எங்க தேசம்
என இருந்த
வங்க தேசம்
இன்று எங்கே?
இக் கதி
வர வேண்டுமா
அங்கே ?!

1947..
இந்தியாவும் பாகிஸ்தானும்
மனப் போர் புரிந்தன !!
மறுத்துக் கொண்டே
பிரிந்தன..!!

நிலத்துக்குள் விழுந்தது
கோடு !!
இன்று வரை தொடர்கிறது
துப்பாக்கி சூடு !!

வெற்றி..
பிரித்துத் தள்ளுதலிலா ?
வேற்றுமையை
பொறுத்துக் கொள்ளுதலிலா ?

பேசவில்லையா
உன் துயரை நான்
மத்தியில்?
அந்த அளவுக்கா
எனக்கு புத்தியில்?

அவர்களுக்கு
இது தீர்க்கும்
உத்தியில் !!
காரணம் அடுத்த
பத்தியில் !!

தினப் பிரச்சினையாயினும்
உன்னுடையது
இனப் பிரச்சினை !!

தமிழனாய் அன்றி
தரணிக்கு பெளத்தம்
தந்த பெருமையில்
சொல்கிறேன்..

சிங்களவர் ஆயினும்
எங்களவர்
என நினைப்பவர்
நாங்கள் !!
இதற்காக எங்களை
வெறுக்கலாமா தாங்கள் ?!

உந்தன் கோரிக்கை
யாது?
உன் துயர்
உணராது உலகு
அதனை அறியாது !!

பட்டியலிடு அவற்றை !!
சுட்டிக் காட்டாதே
பிறரது தவற்றை !

பள்ளி ஏடுகள்
உரைக்க வேண்டும்
உன் விருத்தத்தை !!
உலக நாடுகள்
உணர வேண்டும்
உன் வருத்தத்தை !!

10 ஆண்டுகளுக்கு முன்பு
பார்க்கவோ பேசவோ
இல்லாதிருந்த நாடு
கோசவோ..

அங்கு அமைதி
வேரோடவில்லையா?
உலக நாடுகள் அதற்கு
போராடவில்லையா?

உலகோர் காதுகளில்
விழுகிறது உந்தன்
சுதந்திர ஒலிகள் !!
ஆனால்..
உன் முகமாய்
அவர்க்குத் தெரிவது
விடுதலைப் புலிகள் !!

கண்ணுக்கு கண் எனில்
உலகு ஆகும் குருடு !!
எனவே..
அகிம்சை வழியில்
உலகோர் மனத்தை
திருடு !!

உலக நாடுகள்
அறியாது திபத்தின்
துயரை !!
ஆயினும் அறியும்
ரிச்சர்ட் கியரை !!

சீனா..
இருந்திருக்கலாம்
இன்று வரை
திபத்தில் கோலோச்சி.
இனி இருக்க
விடுவாரா
நான்சி பெலோசி?!

உனது இன்றைய
அத்தியாவசியத் தேவை
உன் கருத்தை
உலகில் பறைசாற்றும்
தூதுவர் !!
அதன் பின்
எவர் உன்னோடு
மோதுவர் ?

அநீதி என
அவனி உணரின்
விதிக்கும் விடை
பொருளாதாரத் தடை !!
மூடும் கடை !!

பேசிப் பேசி
என்ன செய்தது
நார்வே?
வருகிறது எவர்க்கும்
சோர்வே !!

உனது பிரச்சினையை
உலக மயமாக்கு !!
உலகோரை
உன் வயமாக்கு !!

முயன்ற வரை
போராடு !!
போகாது பிரச்சினை
தீராது !!
ஆனால் நழுவாதே
உண்மையை ஓராது !!

சரித்திரம் இல்லை
சண்டையை சமாதானம்
அழைத்ததாய் !!
மண்ணில் மறம்
தழைத்ததாய் !!
அநீதியை அகிம்சை
விழைத்ததாய் !!

வேண்டாம் செரு !!
சற்று பொறு !!

விலக்கிடு வாளை !!
விளங்கும் நாளை !!

பிடிவாதம்
பயங்கரவாதம்
இரண்டும் விடு !!
சமத்துவத்துக்கான
அடித்தளத்தை
இன்றே நடு !!
ஆறலாம் நாட்பட்ட
வடு !!

எதற்கு வீண்
தர்க்கம்?
என்றும் நீ
எம் வர்க்கம் !!
என் கடைக்கண் என்றும்
உன் பக்கம் !!

என்றும்
என் தோள்
உன் துயர் தாங்கும் !!
மனது உந்தன்
மகிழ்ச்சிக்கு ஏங்கும் !!

ஒரு நாள்
உன் கண்ணீர்
துடைப்பேன் !
புதியதோர் உலகம்
படைப்பேன் !!

Labels: , , , , , ,

Thursday, April 17, 2008

ஈழம் - 01

இராவணன் முதலாய்
தொடங்கிய சொந்தம் !
இராஜ இராஜனால்
இறுகிய பந்தம் !!

சீதையின்
சிறை வீடு !!
சினத்தில் இன்று
தமிழகத்திற்கு விடுக்கிறது
முறையீடு !!

பொறுப்பில் இருக்கும்
கருப்புக் கண்ணாடியே !
கத்திக் கத்தி சோர்கிறது
என் நாடியே !!

எது உமக்கு
பெரிது....
இராமர் பாலமா ?
இடைவிடாது கேட்கும்
இனத்தார் ஓலமா ?

எனக்கு
எனதென்று சொல்லிட
தேசம் இல்லை !!
உனக்கு என்னவன்
எனச் சொல்லிட
நேசம் இல்லை !!

மல்லேசுரத்தில்
மலாய்த் தீவில்
தமிழன் மருண்டான்..
தமிழ் நாட்டில்
தமிழன் வெகுண்டான் !!

மட்டக்களப்பிலும்
தமிழன் அரளுகிறான் !
எத் தமிழன்
தமிழ் நாட்டில்
மிரளுகிறான் ?

நீ "அஞ்சுக்கு"
அஞ்சுகிறாய் !!
பிறகு ஏன்
"எம் இனம்"
என என்னை
கொஞ்சுகிறாய்?

ஏன் முழக்குகிறாய்
பாசச் சங்கு ?
எங்கேயும் இல்லை
எமது துயரில் உந்தன்
பங்கு !

எம் நாட்டு
அகதிகளா?
உம் நாட்டு
தொகுதிகளா?

எதன் மீது உனக்கு
பாசம்?
ஏன் இன்னும்
"தமிழ் தமிழ்" எனும்
வெளி வேசம் ?

எமது
போர் ஒன்று !
நமது
வேர் ஒன்று !!
இருக்கலாகாது
இதை மறுக்கும் சிந்தனை
வேறொன்று !!

உடைத்து விடு
எமது கை விலங்கை !!
உருவாகும் புதியதோர்
இலங்கை !!

வைக்கிறது ஈழம்
வழக்கை !!
வலிக்கிறது எனக்கு
வலக்கை !!

கொடுக்க வேண்டும்
கோட்டையில் உள்ளோர்
இதற்கு பதில் !!
இன்றைய தேதியில்
இன்றியமையாத பிரச்சினை
இருக்கலாமா
இதற்கு பதில்? !!

வந்து விழுந்த
வார்த்தை கண்டு
வெறிக்கிறேன்..
எனது கருத்தை
சிறிது விரிக்கிறேன் !!

-- தொடரும்

Labels: , , ,