Monday, April 28, 2008

தமிழ்த் தாத்தா....

UVS_Iyer
Picture Courtesy: Wikepedia

”தொன்மொழிகளின் தேவாலயம்”
எனப் போற்றப்படும்
செம்மொழியாம் தமிழை....
மாறா வனப்புடைய
தங்கச் சிமிழை...

காலம் சில நாள்
கறையானே காவலாய்
குடி வைத்தது !!
அது ஒருவரது
உள்ளத்தை அறவே
தைத்தது !!

தில்லை முதல்
நெல்லை வரை
எல்லையில்லாது....
எடுப்பார்
தொல்லையில்லாது....

பல மூலையில்
பனை ஓலையில்

இருந்தன
பல சுவடிகள்
கேட்பாரற்று !!
இரண்டாம் பட்சமானது
தமிழ்ப் பற்று !!
காரணம் புற்று !!

சங்கம் வளர்த்த தமிழ்
அங்கம் சிதைவதை
பங்கம் அடைவதை

முடியவில்லை ஒரு
தாத்தாவால் தாங்க..
மேலும் கீழும்
மூச்சு வாங்க....

அங்கிங்கெனாது
எங்கெங்கும் சென்று...
பல நாள்
வெறும் காற்றையே
மென்று....

ஓலை தேடுவதே
வேலையாய்...

கண்டெடுத்தார்
காணக்கிடைக்கா
காப்பியங்களை
அத் தாதை..
தமிழின் மீது
தாளாப் பற்றுடைய
மா மேதை !!

அவரின்றி..
கிடைத்திருக்குமா நமக்கு
எட்டுத் தொகையும் ?
ஈடாகுமா அதற்கு
எத் தொகையும் ?

அவர் சிரமத்தை
அவர் கண்டெடுத்த
பதினெண் கீழ் கணக்கும்
பத்துப் பாட்டும்
என்றும் காட்டும்
தமிழ் தரணியிலுள்ள வரை
அவர் பெருமையை
நிலை நாட்டும்...

28/04
”தா ! தா !” என
தமிழைச் சேர்த்த
” தமிழ்த் தாத்தா”
உ வே சா
நினைவு தினம்...
தமிழனே..
நினை நீ அவரை
தினம்....

மொத்தத்தில்...
கவலைக் களை காணின்
அதனைக் களை என
தமிழ் தேடுகிறது சில
தாத்தாக்களை...

தமிழை மீட்டார்
அந்தத் தாத்தா !!
தமிழனை மீட்பாரா
இன்றைய தாத்தா?

Labels: , , , , ,