Tuesday, October 09, 2012

குளிர்

முயன்று பெறா சுதந்திரத்தை
முழக்கும்
முடக்கப்பட்டிருந்த ரஜாய்..

ஓராண்டு ஓய்வினின்று
ஓதத்தின் ஈரம்
காட்டும் சுவர்கள்
மூட மறுக்கும் கதவுகள்..

சூட்டிற்கு வீட்டிற்குள்
காலுறையுள்
கால் நுழைக்கும்
பாதங்கள்…

தங்கு தடையின்றி
தடுக்கிடும் இடங்களிலெல்லாம்
தவளைகள்…

சோம்பலோடு
வெந்நீருக்கு
வெளி வரும்
வெங்கலப் பானைகள்…

சன்னமாக
மக்கியதன் சின்னமாக
பற்ற வைக்காமலே
புகை கக்கும்
விறகுக் கட்டைகள்…

எரியலாமா எனும்
எண்ணத்தோடு
எங்கோ தூரத்தில்
எழும் தீ சுவாலை..

”அகலாது அணுகாது”
கையை நம்பியாராய் தேய்த்து
கட்சிக் கும்பல் போல்
அதைச் சுற்றியும் ஒரு
அவசரக் கூட்டம்..

காய்ச்சிக் குடிக்க
கருப்பட்டியும்
காய்ச்சலுக்கு உதவும்
காயங்களும்
தைல மர
தைலமும்
சரும வறட்சி
சர்வ நிவாரணிகளும்
வருகைப் பதிவை பதித்த
வாங்க வேண்டிய பட்டியல்..

மடித்து விடப்பட்ட
முழுக்கை சட்டைகளில்
நேர் செய்யப்படும்
கைப் பொத்தான்கள்

சாயா
பாயா கடைகளில்
”கோலா” இளைஞர்கள்..

மஞ்சள் பூசணிக்கு
மடல் வரைந்து
வேலை முடிந்ததென
விடை பெறும்
தர்பூசணி கொடிகள்…

தைலக் காப்பிற்கு
தயார் ஆகும்
தகத்தகாயமான தெய்வங்கள்…

மார்கழிக் கோலங்களை
மனனம் செய்யும்
மாதரசிகள்…

தோரணமாய்
துணி காய
மின் விசிறியின் கீழ்
மிளிரும் புதுக் கொடிகள்..

திரும்பவும் திருப்பப்படும்
திருப்பாவை புத்தகங்கள்…

தளிர் காலம் தேடி
தவிக்கும் தாவரங்கள்

டில்லியின் வெட்பநிலை
தினம் பார்க்கும்
வடக்கில் மகன்
வாழும் வீடுகள்

”சீசனை” நினைந்து
தொண்டையை செருமும்
பாடகர்கள்

ரயில் ஓடத் தொடங்கியதும்
ரகசியமின்றியே மூடப்படும்
ஜன்னல்கள்…

மொத்தத்தில்..
ஊரெங்கும் நடுக்கம் !!
குளிரின் தொடக்கம் !!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home