Tuesday, August 21, 2018

வாணி...

1)
வெண் கமலத்தே வீணையோடு வீற்றவளை
வெண்பாவிற்கு கேட்டேன் வழி - தண்
கண் சிமிட்டி காட்டினள் உபாயம்
எண்ணியதும் வந்தது பண்.

2)
ஏணியின்றி இல்லை ஏறுதற்கு உதவி
தோணியன்றில்லை நதி தாண்டுதல் - கழனி
காணியின்றி இல்லை நல் வாழ்வோ
வாணியின்றி இல்லை யாமே

3)
சொல்லை தருபவளுக்கு சுடர் ஏற்ற
இல்லை கூத்தனூரன்றி கோவில் - ஆதலின்
உளமே ஆலயமாய் வளமாய் வாணியை
வாயார வாழ்த்திப் பாடு

4)
நான்முகனின் இல்லாள் நாரதனை ஈன்றாள்
நயத்தகு சொல்லாள்; நல்லாள் - அறிவிலி
கல்லாரைத் தள்ளாள்; பொல்லாரைப் பேணாள்
கலைமகளை போற்றிப் பணி

5)
உயர் கலைகள் எட்டெட்டின் பிறப்பிடம்
துயர் கல்லாமையின் இறப்பிடம் - ஆனிப்
பொன் குணங்களின் ஒளிர்விடம் ஆங்கண்
என்றும் வீற்றிருப்பாள் வாணி

6)
மகதி வீணையோனின் தாய் கல்லா
அகதிகளை காப்பாள் நலமாய் - நெஞ்சச்
சகதி களையும் சரஸ்வதியின் புகழை
நற்கதி அடைய நினை

7)
சொற்புகழ் தருபவள் அன்னத்தில் வருபவள்
கற்பு நெறி மிக்கவள் - கலைவாணியாள்
நற்புகழை நாளும் நாவார நன்னெறியுடன்
தற்புகழை விடுத்துப் பாடு

8)
உற்றவன் உலகத்தை உருவாக்குவான் தான்
பெற்றவன் கலகத்தை உருவாக்குவான் - கச்சபீ
யாழ் மீட்டுவாளை நெஞ்சார நினைக்கின்
வாழ்வின் முரண் விளங்கிடும்

9)
ஞானத்தின் முதல்வி நாமகளின் வாரிசோ
கானத்தின் முதல்வன் காணீர்! - வானே
போற்றும் வாகீசுவரியை பூசிக்க தானே
தோற்றுப் போகும் துயர்

10)

நயத்தகு நாதத்தில் புத்தகத்தில் பதத்தில்
வியத்தகு வேதத்தில் வீற்றவள் - மனச்
சுமை களையும் சுகமருந்தாம் கலைமகளை
இமைப்பொழுதும் நினைவில் இருத்து

11)
பன்னீர் வேண்டாம் பட்டாடை வேண்டாம்
நன்னீராடி வெண்ணீறணி நாளும் - பேச
நாச்சொல் வைத்தாள் நாமகளை வேண்டிட
பாச்சொல் ஒன்று போதுமே

12)
சாவித்திரியாய் சரஸ்வதியாய் காயத்திரியாய் ஜகதீஸ்வரியாய்
மேவியிருப்பாள் சிருங்கேரியில் காண் - அனைத்திலும்
ஆயாய் அவளே அமைந்திருக்க அறிந்திலதை
ஆயாய் நீ அருமனமே

Labels: , , , ,

ஏழு சுரங்களுக்குள். . .



நிமிர்ந்து நிற்கிறது
எந்தன் தலை !!
நிலை கொள்ளக் காரணம்
இரட்டை இலை !!

செவிக்கு உணவு கேட்டார்
செறிவோடு பெருமையுற....
செய்யாதார் சிறுமையுற....

செயற்கரிய செயலை
செம்மையாக
செய்து முடித்திருக்கிறது
“செயா” தொலைக்காட்சி !!
வசந்தம் வருமுன்னே
வந்தது நமக்கு மீட்சி !!

“Carnatic Music Idol” என்ற
அஷரங்களின்
அரசன் யார்? எனும்
அர்த்தம் உள்ள
அந்த போட்டி

நம் சமூகத்திற்கு
நல் வழிகாட்டி !!

”தைவதத்தில் துவங்கு !
நிஷாதத்தில் நிறுத்து !! “

”விளம்ப காலத்தில்
கிளம்பு !!

துரித காலத்தில்
துவளாது சுரங்களை விவரி !!
காணாமல் போகாதே
வழி தவறி !! “

”கணக்கோடு தாளத்தை
கச்சிதமாய் போடு !!
கணீரென பாடு !! “

”நற்றுணை” நமச்சிவாயமே எனும்
நம்பிக்கையை நாம்
நாளும் மறவாதிருக்க
நற் பொருளோடு
நற்றவற்றவர் இயற்றிய
நலமிகு பாடலை

நயமாக பாடாத
நினது சாமர்த்தியம் என்ன ?

திரும்பச் சொல்
திருத்துகிறேன் நான்
சாகித்தியம் என்ன ?

”ஆறில் ஒருவனே !!
போட்டியாளரில் சிறுவனே !!

மக்களின் எச்சரிப்பென்ன ?
நீ பாடிய ஷண்முகப்ரியாவில்
நிஷாதத்தின் உச்சரிப்பென்ன ?”

”சுட்டிப் பெண்ணே !
குட்டிப் பெண்ணே !!

முதலிடம் உனது தேடல் !!
முகவரி மறக்கலாமா
உந்தன் பாடல் ?!

சுரம் அதன்
தரம் விடுக்க

போனாள் ”நாயகி” ”தர்பாருக்கு” !!
போதோடு நீ
போகலாம் இனி ஊருக்கு !!

ஜதியினின்று வழுவாதே !!
நாங்கள் உன் மீது வைத்த
நம்பிக்கையினின்று நழுவாதே !!

என...
வகைக்கேற்ப
வளரும் கலைஞரை

வளர்ந்த கலைஞர்
வறுத்து எடுத்தார் !!

கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
கேட்டார் களிப்புற
போட்டியாளர் பாடலால்
பதில் கொடுத்தார் !!

திரும்பிய பக்கமெல்லாம்
திரளாக வந்த சுரத்தில்

அடைந்தேன் நான்
அளவிலா திளைப்பு !!
அகன்றது என்
”அந்த நாளும் வந்திடாதோ” எனும்
அங்கலாய்ப்பில் வந்த களைப்பு !!

ஆழ் மனதில்
ஆழங்கால் பதிக்குமாறு
எண்ணங்கள் சில
எங்கிருந்தோ உதிக்கின்றன !!

நம் பலத்தை
நாம் ஆராய வேண்டும் எனும்
நற் சிந்தையை அவை
நம்முள் பதிக்கின்றன !!