Friday, February 06, 2009

தண்டோரா கேட்ட தருமியாய். . .

தவிக்கிறது தமிழகம்
தரமான ஒரு நடிகர்
தவறியதால் !!
தவிக்கிறேன் நான்
தவர் அவர்க்கு
தன் கடைமையினின்று
தமிழகம் தவறியதால் !!

அவரை இழந்து அரற்றுகிறது
நகைச்சுவை உலகம் !!
அவ்வுலகில் அவரே
அனேகமாய் மற்றுமோர்
நடிகர் திலகம் !!

தமிழ் உலகிற்கு சிரிப்பூட்டவும்
தம் தொழிலுக்கு சிறப்பூட்டவும்

குண்டு ராவின்
குன்றளாவிய பணி பெரிது !!
அவர் ஒத்த நடிகரை
அதிகம் நாம் காணல் அரிது !!

ஆயிரம் பொற்காசுக்கு
ஆயாசமாக அனல் மூச்சிட்டு
ஆகாயம் பார்த்த தருமியாக...
ஓகோ ஓகோ என
”ஓஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்”
செல்லப்பாவாக....

அபூர்வ ராகங்களில்
அரு மருத்துவராம் சூரியாக....
ஏற்ற நடிப்பால்
ஏற்ற பாத்திரமாகவே அவர் மாறியாக.....
எழுதலாம் அவரைப் பற்றி விலாவாரியாக !!

காண்கிறேன் இன்று
காமெடி நடிகரிடம்
கண்ட மேனிக்கு கூச்சல் !!
கண்டிருப்பாரா அவர் நாகேஷின்
எதிர் நீச்சல் ?

மடிப் பிச்சை ஏந்தி
”மாது வந்திருக்கேன்” என…

காட்சிக்கு காட்சி
காண்பார் மனங்களை
கலக்கியவர் !!
பார்த்தார் நெஞ்சினின்று சிரிப்பை
பற்பல நாள் விலக்கியவர் !!

தர்மத்துக்கு எதிராக
தர்மராஜாக
”போலீஸ்கார நாயே” என
அபூர்வ சகோதரர்களில்
அனேகரை மிரட்டியவர் !!
வில்லன் நடிகர்களையே
வில்லத்தனத்தால் விரட்டியவர் !!

நடிகர் திலகம் தொடங்கி
நடிகர் பலருக்கு
நீள் வசனமெனில்
நா ”கேஷ்” !!
நாலு வார்த்தை சொல்லுவதை
நம் முகம் சொன்னால்? என
நினைத்தவர் நாகேஷ் !!

”ஆன்மா தவிர
அழியக் கூடியவை அனைத்தும் !!
நடப்பன உண்டோ
நடந்ததையே நினைத்தும் ?

இருக்கும் விரல்களால்
இழந்தோரை எண்ணாதே !!
இருப்போரை மறக்கும்
இழி செயலை பண்ணாதே !!”

மனதிற்கு சொல்கிறது கீதை !!
மறந்தால் உருவாகிறது வாதை !!

இருப்பினும் நம்மை
இன்னோர் சிலரது
இழப்பு பாதிக்கின்றது !!
நிதம் அந் நினைவு
நிலையற்ற வாழ்வில்
நிலையற்றோர் நம்மை
சோதிக்கின்றது !!

விசிறி எனக்கே
விசும்பல் இத்தனை......
பாசறையில் பட்டை தீட்டிய
பாலசந்தருக்கு எத்தனை ?

அடித்துச் சொல்கிறேன்
அழுதிருப்பார் கே.பி !
அனேக தினங்கள் கேவி !!

”பாட்டுக்கு நாரதன்
வீணைக்கு வாணி
அழகுக்கு முருகன்
சொல்லுக்கு அகத்தியன்
வில்லுக்கு விஜயன்
ஆசைக்கு நீ
அறிவுக்கு நான் “

இவ் வசனம்
இனி கேட்கும் நாள்
இலங்கும் என்னுள் விசனம் !!

”நடிப்புக்கு சிவாஜி”
”நகைச்சுவைக்கு நாகேஷ்” என

நாமறிந்தென்ன ?
நாடறிந்தென்ன ?

தமிழகத்தின் இரு
தனிப் பெரும் நடிகருக்கு
தரப் படவில்லையே
தாதா சாகேப் பால்கே !!
தரச் சொல்லி அழுத்தும்
திராணி இல்லையோ
தமிழக “தாத்தா” ஆளுக்கே ?

Labels: , , , ,

Thursday, September 18, 2008

கூடல்நகர் கயற்கண்ணி. . .

IMG_2746

திருக்கயிலை உறைபவன்
திருவிளையாடல் புரிந்த ஊர் !!
தீர்ப்பு ஒன்று தவறானதால்
தீயில் எரிந்த ஊர் !!

தமிழ்ச் சங்கத்தின்
தலை நகர் !!
தன்னிகரில்லா அதற்கு
தரணியிலில்லை நிகர் !!

நக்கீரர்
கபிலர்
பரணர்
உலவிய நாடு !!
உவந்து கூறும் அவர் புகழை
உலகத் தமிழ் ஏடு !!

மீன் கொடி பறக்கும்
பாண்டிய மண் !!
கொஞ்சும் தமிழ்
அதன்கண் !!

“ப்புல”
“ம்முல”
ஆங்காங்கே வார்த்தையோடு
அவற்றை சேர்த்து
அவுக, இவுக,
“அங்கன” “இங்கன”
லந்து, பந்தா கோர்த்து...

நாக்கை சிறிது
மடித்து பழக்கிட…
பேச்சை சிறிது
சன்னமாய் முழக்கிட…

மதுரைத் தமிழ் வரும் !!
மட்டற்ற சுகம் தரும் !!

நள்ளிரவோ
நண்பகலோ

எவ்வேளையிலும் கிடைக்கும்
எவர்க்கும் உண்டி !!
எவ்வுணவு விடுதியின் முன்னும்
எந்நேரமும் வண்டி !!

வாய்க்கு “ஜிகர்தண்டா”
வாசனைக்கு மல்லி

வாய்ப்பாட்டுக்கு சேஷு
வாதத் தலைமைக்கு
ஞான சம்பந்தன், பாப்பையா

வாரிக் குடிக்க வைகை
வாய்விட்டு சிரிக்க
”வைகைப் புயல்”

இவர்களும் இவையும்
இவ்வூர் பெருமையை கூறும் !!
இன்ன பிறவற்றை நூறும் !!

ஆளுகின்றாள் அவ்வூரினை
ஆதிநாள் முதல் அங்கயற்கண்ணி !!
அனேக பாடல்கள்
அவளை துதி பண்ணி !!

சேம நலம் பேண..
சென்றேன் அவளைக் காண..

கோயில் எங்கும்
கும்பாபிஷேக வேலை !!
காண முடிந்தது அதனால்
கோபுரமெங்கும் ஓலை !!

IMG_2749

தண்ணீர் சிறிதளவே
பொற்றாமரை குளத்தில் !!
பாசியற்றிருப்பினும்
பச்சையாயிருந்தது
தாவர வளத்தில் !!

விபூதி வினாயகன்
ஒரு கோடியில் !!
அருகம்புல்லன்றி
அவனருகே ஒரு மூடி இல் !!

தண்ணீர் பட்டாலே
கரைந்திடுவான் !!
தமியார்க்கு ஒன்றென்றால்
விரைந்திடுவான் !!

காண வந்தவளை தேடி
விரைந்தேன் !!
கணத்தில் கண் நிறைந்தேன் !!

ஒய்யாரமாய் நின்றிருந்தாள்
ஒரு கையில் கிளியோடு !!
கண்ணில் தண் ஒளியோடு !!

சுந்தரேசுவரரையும்
முக்குறுணிப் பிள்ளையாரையும்
வலம் வந்து நின்றேன் !!
எங்கே அழகன்? என்றேன் !!

IMG_2755

கண்டேன் அவனை
கண்ணெதிர் தூணில்
தாரை வார்க்கும் பொறுப்பில் !!
அவனன்றி ஆரழகு?
அதற்கு மறுப்பு இல் !!

அனுதினமும்
அழகாயிருப்பதே
அவன் வேலை !!
செல்லவிருக்கிறேன் அதற்காக
மாலிருஞ்சோலை !!

IMG_2758

ஆயிரங்கால் மண்டபத்தில்
ஆனது புகைப்படக் கருவி மக்கர் !!
ஆயினும் அதனழகில்
ஆர் தான் கண் சொக்கர்?

வெளிப் போந்தோம்
புது மண்டபக் கடைகள் வழியாக !!
வெயில் காய்ந்தது பழியாக !!

IMG_2762

காலணி விட்ட இடம்
கால்கள் நடந்தன !!
சில நிமிடம் கடந்தன !!

காணவில்லை மனைவியின்
செருப்பினை !!
மறந்தாள் கடைக்காரி
பாதுகாக்கும் பொறுப்பினை !!

அவளைத் திட்டித் தீர்த்தேன் !!
ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தேன் !!

”மதுரை சந்திப்பு” போகுமுன்
உணவுக்கு இறங்கினோம்
முருகன் இட்லி கடையில் !!
அது போன்ற இட்லி
அரிது ! மிகை இல் !!

உள்ளம் திளைத்திருந்தது !!
உடல் களைத்திருந்தது !!

ஊர் திரும்பத் துணிந்தேன் !!
நான்கு நாள் சிந்தனைகளை
நினைவில் அணிந்தேன் !!

நமது திருத்தலங்களில்
நான் பார்த்த வரையில்

திருநீறணியா தேகமில்லை !!
திமிரான வேகமில்லை !!

பலவற்றிற்குப்
பெருநகரம் எனும்
பலத்த தகுதியில்லை !!
அதனாலோ எனவோ
வாகனங்கள் மிகுதியில்லை !!

இங்கங்கெனாது
இருளில் நடக்கிறது
ஆயிரம் ஊழல் !!
இருக்கிறது அசுத்தமாய்
சுற்றுச் சூழல் !!

இவற்றை வைத்து போடலாகாது
நகரத்தை எடை !
அகத்தின் அழகை
அழகுறக் காட்டுமா உடை ?

பெரும்பாலான மக்களிடம்
பெரும்பாலான நேரத்தில்

கீழும் மேலும் பார்த்து
கிடைத்ததைப் பறிக்கும் நோக்கில்லை !!
”பணம் பணம்” எனும் போக்கில்லை !!

வண்டியேறி புறப்பட்டேன்
இச் சிந்திப்பில் !!
வந்திறங்கினேன் விடிகாலை
தாம்பரம் சந்திப்பில் !!

வைகறை ஆனதால்
வெயில் தகிக்கவில்லை !!
இருந்தும் சொல்கிறேன் -
சென்னை சகிக்கவில்லை !!

Labels: , , , , , ,