Wednesday, August 26, 2009

நகைச்சுவை நாயகர். . .

2008110153440801

அவர் ”முனைவர்” !!
அகத் தெளிவு தரும்
அவரது பேச்சை ரசிப்பார்
அணுவளவேனும்
அவரொத்து சிந்திக்க முனைவர் !!

இளங்காலை நேரம்
இல்லந்தோறும் வந்து
”இன்றைய சிந்தனை” என
இனிய கருத்துக்களை பகர்ந்தவர் !!

மனதிற்கு மகிழ்ச்சியூட்டும்
மதுரைத் தமிழை
மனதார நுகர்ந்தவர் !!

நகுதலன்றி நம் வாழ்வில்
நமக்குண்டோ உய்வென

நிதம் உலுக்கும் துயரரிய
நம்பி எடுத்தார் நாவில்
நகைச்சுவை எனும் பரசு !!

”கலைமாமணி” எனும்
கவித்துவமிக்க பட்டத்தால்
கண்ணியமாய் கெளரவித்தது அரசு!

பட்டிமன்ற பேச்சால்
பதவிசாய் வெற்றி
படியேறி வந்தது !!
பலகோடி புகழ் தந்தது !!

திசைக்கு ஒன்றாய்
திரளாய் வந்தன பெருமைகள்
திரை கடல் தாண்டி !!
பெயருக்கே
பெருமிதம் தந்தது விருமாண்டி !!

சமீபத்திய சென்னை விசயத்தில்..
சிரமம் வேண்டாம் பிறர்க்கென சுயத்தில்...

பல கடை ஏறி
பலவாறு முயன்றேன்
பலதரப்பட்ட அவரது
புத்தகங்களை வாங்க !!

முக்கிய நகரமாம் சென்னையில்
முன்னோடியான கடைகளும்
முதன்மையாய் தமிழ் நூல்களை
முதற்கண் முன்னிறுத்தாததால்

முடியாது நின்றேன்
மூச்சு வாங்க !!

முனைவரின் மூதாதையர் ஊர்
முன்னைக்கு இப்போது
முற்றும் மாறா சோழவந்தான் !!
சோழவந்தான் எனும்
சேமமிகு ஊர்விட்டே

எனது மாமனாரும்
என்றோ சென்னைக்கு வாழவந்தார் !

எனது விசனத்தை
எனது மாமனாரிடம்
எளியேன் நான் அளக்க....
ஞானசம்பந்தன் யாரென
நச்சென்று நாலு வரியில்
நயமாய் நான் விளக்க....

தொல்லை விடு !
முடியவில்லை எனும்
சொல்லை விடு !

என..
தந்தார் எனக்கு மாமனார்
தனக்கே உரிய ஆசியை !!
எடுத்தார் தொலைபேசியை !!

அச்சகம் அச்சகமாக
அனேக எண்களை சுற்றினார் !!
ஏரார்ந்த விஜயா பதிப்பகத்தை
எவர் மூலமோ
என்னணமோ
எளிதாய் பற்றினார் !!

அறிஞர் ஞானசம்பந்தனின்
அனைத்து புத்தகங்களும்
அடுத்த நாளே
அடியேன் கையில்
அடங்கின !!

இனிய என் மாமனார்
இரண்டாவது பிரதியோடு
இரண்டறக் கலந்ததால்...

புத்தகம் படித்தல் எனும்
புண்ணியக் கலையை...

இருவர் இல்லமும்
இனிதே தொடங்கின !!

”முனைவரின் தந்தையாரது
முதற்பெயர் குருநாதன் !!
தருமமிகு சோழவந்தானில்
தவசீலர் அவரே
தனக்கும் தம்பியருக்கும்
தமிழ் போதித்த குருநாதன் !!”

என்று
என் மாமனார் அறிய. .
எண்ணிலா வியப்பில்
எல்லோர் கண்ணும் விரிய...

முனைவரின் தந்தையை நினைந்து
மாமனார் ஒற்றினார் கண்ணை !!
முனைவர் இல்லத்துக்கு
சுற்றினார் எண்ணை !!

இனிய பழங்கதை
இருவரும் பேசியிருக்கின்றனர்
ஆசை தீர...
இடையே என்னைப் பற்றியும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இனிய மாமனார் கூற...

அடித்தது தொலைபேசி
அடியேன் இல்லத்தில்
அனேகமாய் மதியம் இரண்டளவில் !
அமர்ந்தது அளவொண்ணா வியப்பு
ஆரென்று கேட்ட உதட்டுப் பிளவில் !!

அரை நொடியில்
அடிமொத்தமாய்
அற்றுப் போனது
அடியேன் சுவாசம் !!

என்ன பேசுவது
என்று அறியாது
எக்கச்சக்கமாய் பிய்ந்தது
என் தலைக் கேசம் !!

தண்டோரா கேட்ட
தருமியாய் நான்
தனித்துப் பதற...
கையும் காலும் உதற....

”தத்தக்கா பித்தக்கா” வென
தமிழ்ப் புலவரொடு
தமியேன் நான் பேசினேன்
தடுக்கித் தடுக்கி
தமிழ்ச் சொல் இரண்டை !!

ஏடாகூடமாய்
ஏதாவது நான் பேசாதிருக்க
ஏழுமலையானை வேண்டி

பெற்றவள் தேடினாள்
பெற்ற வயிற்றுக்கு பிரண்டை !!

சுருக்கமாய் இரு வார்த்தை
சுடச் சுட பேசி..

”அமெரிக்கா வந்தால்
அவசியம் எம்மில்லம் வாருங்கள் !!
அடியேனுக்கு புகழ் சேருங்கள் !! “
என..

வடிவாய்ச் சொல்லி
வைத்தேன் தொலைபேசியை !!
விழியில் விழுந்தவள்
விரைந்து வைத்தாள்
வியர்த்த உடம்புக்கு “ஏசியை” !!

மானுடமே !
மறுபடியும் சொல்கிறேன்
மகான் வள்ளுவனின்
மகத்தான வாக்கு பொய்க்கவில்லை !!

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து


நிறையப் படிக்காத
நிரட்சரகுட்சியாம் என்னை
நலமா? என

ஞாலம் போற்றும்
ஞானசம்பந்தன் கேட்டது

அவரது பணிவுக்கு
அத்தாட்சி !!

அடியேன் அகத்திலும்..
அவதரித்த அகத்திலும் ..

அனேக நாள் ஓடும்
அக் காட்சி !!

தியாகராஜர் கல்லூரியில்
போதித்தும்...
தனித்து சாதித்தும்...

எடுத்த பணிக்கோர்
எடுத்துக்காட்டாக...

நாளெல்லாம் தொடர்கின்றார்
நானிலத்தார்க்கு
நான்கு வார்த்தை
”நகைச்சுவையோடு” நல்கி !!
வாரந்தோறும்
வாசித்து மகிழ
வாங்குங்கள் இன்றே கல்கி !!

Labels: , , ,

Thursday, September 18, 2008

கூடல்நகர் கயற்கண்ணி. . .

IMG_2746

திருக்கயிலை உறைபவன்
திருவிளையாடல் புரிந்த ஊர் !!
தீர்ப்பு ஒன்று தவறானதால்
தீயில் எரிந்த ஊர் !!

தமிழ்ச் சங்கத்தின்
தலை நகர் !!
தன்னிகரில்லா அதற்கு
தரணியிலில்லை நிகர் !!

நக்கீரர்
கபிலர்
பரணர்
உலவிய நாடு !!
உவந்து கூறும் அவர் புகழை
உலகத் தமிழ் ஏடு !!

மீன் கொடி பறக்கும்
பாண்டிய மண் !!
கொஞ்சும் தமிழ்
அதன்கண் !!

“ப்புல”
“ம்முல”
ஆங்காங்கே வார்த்தையோடு
அவற்றை சேர்த்து
அவுக, இவுக,
“அங்கன” “இங்கன”
லந்து, பந்தா கோர்த்து...

நாக்கை சிறிது
மடித்து பழக்கிட…
பேச்சை சிறிது
சன்னமாய் முழக்கிட…

மதுரைத் தமிழ் வரும் !!
மட்டற்ற சுகம் தரும் !!

நள்ளிரவோ
நண்பகலோ

எவ்வேளையிலும் கிடைக்கும்
எவர்க்கும் உண்டி !!
எவ்வுணவு விடுதியின் முன்னும்
எந்நேரமும் வண்டி !!

வாய்க்கு “ஜிகர்தண்டா”
வாசனைக்கு மல்லி

வாய்ப்பாட்டுக்கு சேஷு
வாதத் தலைமைக்கு
ஞான சம்பந்தன், பாப்பையா

வாரிக் குடிக்க வைகை
வாய்விட்டு சிரிக்க
”வைகைப் புயல்”

இவர்களும் இவையும்
இவ்வூர் பெருமையை கூறும் !!
இன்ன பிறவற்றை நூறும் !!

ஆளுகின்றாள் அவ்வூரினை
ஆதிநாள் முதல் அங்கயற்கண்ணி !!
அனேக பாடல்கள்
அவளை துதி பண்ணி !!

சேம நலம் பேண..
சென்றேன் அவளைக் காண..

கோயில் எங்கும்
கும்பாபிஷேக வேலை !!
காண முடிந்தது அதனால்
கோபுரமெங்கும் ஓலை !!

IMG_2749

தண்ணீர் சிறிதளவே
பொற்றாமரை குளத்தில் !!
பாசியற்றிருப்பினும்
பச்சையாயிருந்தது
தாவர வளத்தில் !!

விபூதி வினாயகன்
ஒரு கோடியில் !!
அருகம்புல்லன்றி
அவனருகே ஒரு மூடி இல் !!

தண்ணீர் பட்டாலே
கரைந்திடுவான் !!
தமியார்க்கு ஒன்றென்றால்
விரைந்திடுவான் !!

காண வந்தவளை தேடி
விரைந்தேன் !!
கணத்தில் கண் நிறைந்தேன் !!

ஒய்யாரமாய் நின்றிருந்தாள்
ஒரு கையில் கிளியோடு !!
கண்ணில் தண் ஒளியோடு !!

சுந்தரேசுவரரையும்
முக்குறுணிப் பிள்ளையாரையும்
வலம் வந்து நின்றேன் !!
எங்கே அழகன்? என்றேன் !!

IMG_2755

கண்டேன் அவனை
கண்ணெதிர் தூணில்
தாரை வார்க்கும் பொறுப்பில் !!
அவனன்றி ஆரழகு?
அதற்கு மறுப்பு இல் !!

அனுதினமும்
அழகாயிருப்பதே
அவன் வேலை !!
செல்லவிருக்கிறேன் அதற்காக
மாலிருஞ்சோலை !!

IMG_2758

ஆயிரங்கால் மண்டபத்தில்
ஆனது புகைப்படக் கருவி மக்கர் !!
ஆயினும் அதனழகில்
ஆர் தான் கண் சொக்கர்?

வெளிப் போந்தோம்
புது மண்டபக் கடைகள் வழியாக !!
வெயில் காய்ந்தது பழியாக !!

IMG_2762

காலணி விட்ட இடம்
கால்கள் நடந்தன !!
சில நிமிடம் கடந்தன !!

காணவில்லை மனைவியின்
செருப்பினை !!
மறந்தாள் கடைக்காரி
பாதுகாக்கும் பொறுப்பினை !!

அவளைத் திட்டித் தீர்த்தேன் !!
ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தேன் !!

”மதுரை சந்திப்பு” போகுமுன்
உணவுக்கு இறங்கினோம்
முருகன் இட்லி கடையில் !!
அது போன்ற இட்லி
அரிது ! மிகை இல் !!

உள்ளம் திளைத்திருந்தது !!
உடல் களைத்திருந்தது !!

ஊர் திரும்பத் துணிந்தேன் !!
நான்கு நாள் சிந்தனைகளை
நினைவில் அணிந்தேன் !!

நமது திருத்தலங்களில்
நான் பார்த்த வரையில்

திருநீறணியா தேகமில்லை !!
திமிரான வேகமில்லை !!

பலவற்றிற்குப்
பெருநகரம் எனும்
பலத்த தகுதியில்லை !!
அதனாலோ எனவோ
வாகனங்கள் மிகுதியில்லை !!

இங்கங்கெனாது
இருளில் நடக்கிறது
ஆயிரம் ஊழல் !!
இருக்கிறது அசுத்தமாய்
சுற்றுச் சூழல் !!

இவற்றை வைத்து போடலாகாது
நகரத்தை எடை !
அகத்தின் அழகை
அழகுறக் காட்டுமா உடை ?

பெரும்பாலான மக்களிடம்
பெரும்பாலான நேரத்தில்

கீழும் மேலும் பார்த்து
கிடைத்ததைப் பறிக்கும் நோக்கில்லை !!
”பணம் பணம்” எனும் போக்கில்லை !!

வண்டியேறி புறப்பட்டேன்
இச் சிந்திப்பில் !!
வந்திறங்கினேன் விடிகாலை
தாம்பரம் சந்திப்பில் !!

வைகறை ஆனதால்
வெயில் தகிக்கவில்லை !!
இருந்தும் சொல்கிறேன் -
சென்னை சகிக்கவில்லை !!

Labels: , , , , , ,