Monday, January 04, 2010

இருபது வருடங்கள். . . – 2

சங்கீதச் செம்மல்
சந்தானத்தின்

அன்றைய கச்சேரி
அந்தி மாலை
அஞ்சரைக்கு !!

அடியொற்றினோம்
அன்னையும் நானும்
அகதமி அரங்கினுள்

மண்டையில் வெயிலேறி
மதியம் இரண்டரைக்கு !!

சந்தானமா ?
சூப்பர் ஸ்டாரா ?

பாடவிருப்பது யாரென
பார்த்தோருக்கு வியப்பு
பாதாதிகேசம் வரும்படி

நுழைவுச் சீட்டு பெற
நுழைவாயில் தாண்டி
நுழைய

முயன்றும் எம்மால்
முடியாமல் ஆயிற்று !!

கண் மூடி
கண் திறப்பதற்குள்
கண் எதிரே

சந்தானத்தின் கச்சேரிக்கு
சரமாரியாய் சீட்டுகள்
சரசரவென விற்றுப் போயிற்று !!

பெருத்த ஏமாற்றத்தில்
பெருத்த
பெருத்த சீற்றத்தில்

வெறுங் கையோடு
வெளி வந்து
வெறுத்துப் போனேன் !!

அனுபவத்தின் ஆரம்பமே
அத்தமனமானது !!
அடித்துச் சொல்வேன்
அந்த ஏமாற்றம்
அதி கனமானது !!

”இரண்டரைக்கு தொடங்கிய
இரண்டு மணி கச்சேரி
இலவசமடா !!
இப்போது போனாலும்
இனிதே கேட்கலாம்
இரண்டொரு துக்கடா !!”

இழுத்தாள் என்னை
இனிய அன்னை !!

கேட்க வந்தாரை
கேட்க முடியவில்லை !!
என் வருத்தம்
என்னின்று வடியவில்லை !!

உள் நடப்பதை விரும்புவதா ?
உடன் ஊர் திரும்புவதா ?

வேண்டா வெறுப்போடு..
வேண்டாமெனும் மறுப்போடு...

உளம் தத்தளிக்க..
உள்ளே கால் வைக்க
உடல் எத்தனிக்க ..

ஏன் இப்படி? எனும்
ஏமாற்றத்தோடு
ஏறினேன் அகதமியில் படி !!

அன்று
அப் படி
அலுப்பை தந்தது
அப்படி !!

அரங்கினுள் வைத்தேன்
அடி !!
ஏக காலத்தில்
ஏகமாய் வியர்த்தேன்
பல நொடி !!

L-Board பாடகருக்கு
எள் போட இடமில்லாது

நின்று கேட்டவாறு
நிரம்பி வழிந்தது கூட்டம் !!
வசீகரிப்பதாய் இருந்தது
பாடகரின் முகவாட்டம் !!

சுற்றம் பார்த்து...
”சுதா”ரித்து...

பாடுவது யாரென
கேட்டேன் பொதுவாக !!

சுரம் வர
சுரம் பாடும்

நேர்த்தியான எம்.எல்.வியின்
நேரிடை மாணவி



சுதா என்றது அவளை
சுற்றி நின்ற கூட்டம்
மெதுவாக !!

-- தொடரும்

Labels: , ,

Sunday, January 03, 2010

இருபது வருடங்கள். . .

1989…

சச்சின்
சனத் எனும்

இணை பிரியா துருவங்கள்…
இருபது வருடங்கள்….
இத்யாதி இத்யாதி…..

எழுதுவேன் நான் இவ்வாறு
என்று நீவிர் எதிர்பார்த்தால்

இங்கு இடமில்லை அத்
தர்க்கத்திற்கு !!
போங்கள் வேறு பக்கத்திற்கு !!

தமியேன் நான்
தரவிருக்கும் கருத்து

கீர்த்தி சம்பந்தப்பட்டதல்ல !!
மும்மூர்த்தி சம்பந்தப்பட்டது !!

"வானொலி" பார்த்து
வானொலி கேட்ட

குடும்பங்களுள் அன்று
குறுந்தகடுகள் இல்லை !!
நாடா துணையை
நாடா நாளில்லை !!

எழும் காலை
எட்டரை மணியன்றி

எவ்வீட்டையும்
”எந்த பாக்கியமு”ம்
எட்டியதில்லை !!

ஏனைய சிலருக்கோ
பேண்ட் ஒன்றில் சேனல் நான்கில்

மாலை ஆறரைக்கு பாம்புருண்டு
தடங்கலுக்கு வருந்தி தடம் புரண்டு



ஆடிக்கு ஒருமுறை
அமாவாசைக்கு ஒருமுறை
அரங்கேறும்

”அரங்கிசை”யன்றி மற்றொன்றில்
அவ்வின்பம் கிட்டியதில்லை !!

Internet பிறக்கவில்லை !!
இவ்வுலகம் திறக்கவில்லை !!

பஞ்சாட்சரத்தை நினைந்தே
பழகிய பல வீடுகள்...
அஞ்சாயிரம் வரவினை
அறவே தொடவில்லை !!

ஆயினும் அவர்கள்
ஆத்ம சுகத்தை விடவில்லை !!

பற்றவில்லை எனும்
பற்றாக்குறை
பலரை பற்றவில்லை !!

இசை மீது
இசை பலருக்கு
இம்மியும் வற்றவில்லை !!

கார்த்திகை கடக்க மார்கழி...
கால் நடக்கும் ஓர் வழி...
கச்சேரி மீது ஈர்விழி.....

என
“எந்தரோ மஹானுபாவுலு” வாக…
“எத்தனை கேட்டாலும்
போதும் என்பதே இல்லை”
என்பதற்காக

எண்ணற்றோர் வாழ்ந்தார் !!
எண்ணம் சிந்தனை என
எல்லாவற்றிலும் சங்கீதமாக
எண்ணிலார் ஆழ்ந்தார் !!

நாட்டை அறியாரும்
"நாட்டை" அறிய

பாட்டை விரும்பி
பாட்டை இறங்கினார் !!

நேர்முகமாக ஒரு
நேர்த்தியான கச்சேரியை
நேரம் காலம் பார்த்து
நேரடியாக கேட்க

அவ் வருடம்
அவ்வழியில் இறங்கியவருள்
அடியேனும் ஒருவன் !!
அந்த எண்பத்தொன்பதில்
பதினேழு வயது சிறுவன் !!

"இருந்தால் கேட்பேன்
சந்தானம் !!
இறந்தால் கொடுப்பேன்
கண் தானம் !!" என

மகா சனங்களை
மகா பாடு படுத்திய
மகாராஜபுரத்தாருக்கு

அவ்வாண்டு
அகதமி தந்தது
அழகிய விருதாம் ”சங்கீத கலாநிதி” !!
அனைத்து மூலையிலும்
அதிகாலையிலும்
அவரது துதி !!

அவ் வருடம்
அவ் அரங்குள்
அவர் பாடிய
அந்த இருபத்தைந்தாம் தேதி ….

அங்கு தொடங்குகிறது
இக் கவிதையின் சேதி !!

-- தொடரும். . .

Labels: , ,

Thursday, September 25, 2008

செம்மங்குடி....

IMG_2785

அந்தி வானம்..
அமைதியான நேரம்...
அவ்வப்போது மழைத்துளி..
அகதமியின் வாசல்...

முன்னாள் ஜனாதிபதி
முக்கிய விருந்தினராக
வருகை !
பலரிடம்
பவ்யமாய் கட்டப்பட்ட
இரு கை !!

பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலமாக முடுக்கப்பட்டதால்...
வளாகத்துள்
வண்டி நிறுத்தம் தடுக்கப்பட்டதால்..

வாகனத்தை தள்ளி நிறுத்தி..
கண்டவரும் காணா வண்ணம்
”காது கேட்கும் கருவி” பொருத்தி..

அழைப்பிதழை அணைத்தவாறு..
அடிக்கொருதரம் மணிக்கட்டை
அவசர அவசரமாய் பார்த்தவாறு

அனேகர் வாயில் கடக்க...
அரங்கத்தின் கதவு நோக்கி
அதிவிரைவாய் நடக்க...

”அன்னபூர்ணே விசாலாட்சி” என
அட்சர சுத்தமாக
காதில் சாமா...
ஒலித்தகடில் ஒலித்தவர்
ஒப்பாரில்லா
செம்மங்குடி மாமா...

IMG_2790

அன்று
அவரது 100வது
பிறந்த தினம் !!
அவரைக் கொண்டாட
அவரது சிஷ்யர்களிடம்
அமைந்திருக்கிறது இன்றும்
சிறந்த மனம் !!

”ஷீணமை திருகா” முகாரியும்
”ஸ்ரீகாளஹஸ்தித” ஹுசேனியும்
”தெலியலேலு ராமா” தேணுகாவும்

செம்மங்குடியின் திறம் பேசும் !!
அமைதியாக பாட வேண்டியதை
அசுர கதியில் பாடுவாரை
அவை ஏசும் !!

ரீதிகெளளை என்றால்
தமிழகம் முழுதும்
தங்கு தடையின்றி இன்று
”கண்கள் இரண்டால்”
ஜேம்ஸ் வசந்தன் முகம் !!
தருமோ அது செம்மங்குடியின்
”த்வைதமு சுகமா” சுகம்?

உச்சஸ்தாயி போகாத
உடைந்த குரலால்……
உள்மூச்சு நிற்கும் வரை
உன்னிப்பாய் “நோட்ஸ்” எழுதிய
விரலால்…….

காசுக்காக இசை போதிக்கா
கண்ணியவான்...
காஞ்சிப் பெரியவரே
“சங்கீத தாத்தா” என போற்றிய
புண்ணியவான்...

சதாசிவத்திடம் சீட்டில்
எம். எஸ்ஸிடம் பாட்டில்

எல்லை கடந்த நெருக்கம்....
அவரவர் மறைவின் போதும்
அவருக்கிருந்த உருக்கம்...

மாறும் காலத்துக்கு ஒப்பி
மாறிய அவரது தொப்பி....

சிறியவர் பெரியவர் எனாது
சிஷ்யர்களிடம் அவர்க்கிருந்த
சினேகம்..
சிரமம் குரலில் இருப்பினும்
சிதையேறும் வரை
சிறப்பாய் ஒத்துழைத்த தேகம்...

நீறணிந்த முகத்தின் பொலிவு..
நீண்ட ப்ருகாக்களின் வலிவு....

கைத்தடி
கண்ணாடி என
அவர்க்கே உரித்தான
அடையாளக் குறிகள்...
அந்திமக் காலம் வரை
அவர்க்கிருந்த
அற வாழ்க்கை நெறிகள்...

அச் சுரத்தை
அப்படிப் போடு..
அவ் வரியை
அப்படிப் பாடு...

என.....

அறிவுரையின் ஊடே
அவ்வப்போது தலையெடுக்கும்
தஞ்சாவூர் நையாண்டித் தனம்..
தனக்கென வாழாது
தரணிக்கு வாழ்ந்த
தயாள மனம்....

வாய்க்கு நாட்டை
கைக்கு ராட்டை....

என....

காந்தீயக் கொள்கையில் பிடிப்பு...
கதரிலும்
கடைப்பிடித்த எளிமையிலும்
அவர் கொண்டிருந்த துடிப்பு...

என
ஒளிச் சித்திரம்
ஒளிர்ந்தது திரையில்...
ஒன்றினர் ரசிகர்கள்
பதினைந்து நிமிடம் வரையில்..

நன்கு தொகுக்கப்பட்ட
வாழ்க்கைக் குறிப்புகள்..
பலருக்கு வரவழைத்தன
பலத்த சிரிப்புகள் !!

கேரள இசைக் கல்லூரியில்
போதித்ததால்..
மாநிலம் தாண்டி சாதித்ததால்

முகவாட்டம் துறந்து
”முல்லைப் பெரியாறையும்” மறந்து

தண்ணீர் தரா
குறையை மறைக்க....
ஸ்வாதித் திருநாள்
செம்மங்குடியால் அடைந்த
புகழை உரைக்க...

நல்வார்த்தை நான்கால்
நல்லுறவை நவில
அனுப்பி இருந்தது
திருவனந்தபுரம் தூதரை !!

அந்தோ!
கல்லெறி தூரத்திலிருந்தும்
காணவில்லை
கோபாலபுரம் ஃபாதரை !!

அழைப்பிதழ் போகவில்லையா?
அல்லது..
அரங்கத்தோடு ஆகவில்லையா ?

நம் நாட்டாரை
நம் நாட்டார் ஏத்த...
பட்டாடை போர்த்த....

அரசினை ஆள்வாருக்கு
அவகாசமில்லையா ?
அல்லது
அட்சர சுத்தமாய்
சங்கீத சகவாசமில்லையா ?

IMG_2792

நான்கு நாள் கச்சேரியில்
நடு இரண்டு நாள்
நான் சென்றிருந்தேன் !!
ஸ்ரீகண்டனும்
சுதாவும் அருந் தேன் !!

சாவேரி
தர்பார்
நாட்டக்குறிஞ்சி
மோகனம்
மத்யமாவதி என

ராக மாலிகையாய்…
ரணமான மனதுக்கு
ரம்மியமான மூலிகையாய்…

எப்போது யார் பாடினும்...
எங்கு எதற்கு கூடினும்.....

வில் அங்கம் ஏந்தியவனை
வில்லங்கம் அன்றி துதிக்கும்....

வரலாறு காண முடியாதான்
வரலாறு தன்னை.....
வரலாறு காணா வழுத்தத்தினால்
வரலாற்றில் இடம் பதிக்கும்......

படு சோக்கான பாட்டு
”பாவயாமி ரகுராமம்” !!
அது உள்ள வரை
அத்தமிக்காது
செம்மங்குடி நாமம் !!

Labels: , , , , , , , , , , , ,