Sunday, January 03, 2010

இருபது வருடங்கள். . .

1989…

சச்சின்
சனத் எனும்

இணை பிரியா துருவங்கள்…
இருபது வருடங்கள்….
இத்யாதி இத்யாதி…..

எழுதுவேன் நான் இவ்வாறு
என்று நீவிர் எதிர்பார்த்தால்

இங்கு இடமில்லை அத்
தர்க்கத்திற்கு !!
போங்கள் வேறு பக்கத்திற்கு !!

தமியேன் நான்
தரவிருக்கும் கருத்து

கீர்த்தி சம்பந்தப்பட்டதல்ல !!
மும்மூர்த்தி சம்பந்தப்பட்டது !!

"வானொலி" பார்த்து
வானொலி கேட்ட

குடும்பங்களுள் அன்று
குறுந்தகடுகள் இல்லை !!
நாடா துணையை
நாடா நாளில்லை !!

எழும் காலை
எட்டரை மணியன்றி

எவ்வீட்டையும்
”எந்த பாக்கியமு”ம்
எட்டியதில்லை !!

ஏனைய சிலருக்கோ
பேண்ட் ஒன்றில் சேனல் நான்கில்

மாலை ஆறரைக்கு பாம்புருண்டு
தடங்கலுக்கு வருந்தி தடம் புரண்டு



ஆடிக்கு ஒருமுறை
அமாவாசைக்கு ஒருமுறை
அரங்கேறும்

”அரங்கிசை”யன்றி மற்றொன்றில்
அவ்வின்பம் கிட்டியதில்லை !!

Internet பிறக்கவில்லை !!
இவ்வுலகம் திறக்கவில்லை !!

பஞ்சாட்சரத்தை நினைந்தே
பழகிய பல வீடுகள்...
அஞ்சாயிரம் வரவினை
அறவே தொடவில்லை !!

ஆயினும் அவர்கள்
ஆத்ம சுகத்தை விடவில்லை !!

பற்றவில்லை எனும்
பற்றாக்குறை
பலரை பற்றவில்லை !!

இசை மீது
இசை பலருக்கு
இம்மியும் வற்றவில்லை !!

கார்த்திகை கடக்க மார்கழி...
கால் நடக்கும் ஓர் வழி...
கச்சேரி மீது ஈர்விழி.....

என
“எந்தரோ மஹானுபாவுலு” வாக…
“எத்தனை கேட்டாலும்
போதும் என்பதே இல்லை”
என்பதற்காக

எண்ணற்றோர் வாழ்ந்தார் !!
எண்ணம் சிந்தனை என
எல்லாவற்றிலும் சங்கீதமாக
எண்ணிலார் ஆழ்ந்தார் !!

நாட்டை அறியாரும்
"நாட்டை" அறிய

பாட்டை விரும்பி
பாட்டை இறங்கினார் !!

நேர்முகமாக ஒரு
நேர்த்தியான கச்சேரியை
நேரம் காலம் பார்த்து
நேரடியாக கேட்க

அவ் வருடம்
அவ்வழியில் இறங்கியவருள்
அடியேனும் ஒருவன் !!
அந்த எண்பத்தொன்பதில்
பதினேழு வயது சிறுவன் !!

"இருந்தால் கேட்பேன்
சந்தானம் !!
இறந்தால் கொடுப்பேன்
கண் தானம் !!" என

மகா சனங்களை
மகா பாடு படுத்திய
மகாராஜபுரத்தாருக்கு

அவ்வாண்டு
அகதமி தந்தது
அழகிய விருதாம் ”சங்கீத கலாநிதி” !!
அனைத்து மூலையிலும்
அதிகாலையிலும்
அவரது துதி !!

அவ் வருடம்
அவ் அரங்குள்
அவர் பாடிய
அந்த இருபத்தைந்தாம் தேதி ….

அங்கு தொடங்குகிறது
இக் கவிதையின் சேதி !!

-- தொடரும். . .

Labels: , ,