Wednesday, August 26, 2009

நகைச்சுவை நாயகர். . .

2008110153440801

அவர் ”முனைவர்” !!
அகத் தெளிவு தரும்
அவரது பேச்சை ரசிப்பார்
அணுவளவேனும்
அவரொத்து சிந்திக்க முனைவர் !!

இளங்காலை நேரம்
இல்லந்தோறும் வந்து
”இன்றைய சிந்தனை” என
இனிய கருத்துக்களை பகர்ந்தவர் !!

மனதிற்கு மகிழ்ச்சியூட்டும்
மதுரைத் தமிழை
மனதார நுகர்ந்தவர் !!

நகுதலன்றி நம் வாழ்வில்
நமக்குண்டோ உய்வென

நிதம் உலுக்கும் துயரரிய
நம்பி எடுத்தார் நாவில்
நகைச்சுவை எனும் பரசு !!

”கலைமாமணி” எனும்
கவித்துவமிக்க பட்டத்தால்
கண்ணியமாய் கெளரவித்தது அரசு!

பட்டிமன்ற பேச்சால்
பதவிசாய் வெற்றி
படியேறி வந்தது !!
பலகோடி புகழ் தந்தது !!

திசைக்கு ஒன்றாய்
திரளாய் வந்தன பெருமைகள்
திரை கடல் தாண்டி !!
பெயருக்கே
பெருமிதம் தந்தது விருமாண்டி !!

சமீபத்திய சென்னை விசயத்தில்..
சிரமம் வேண்டாம் பிறர்க்கென சுயத்தில்...

பல கடை ஏறி
பலவாறு முயன்றேன்
பலதரப்பட்ட அவரது
புத்தகங்களை வாங்க !!

முக்கிய நகரமாம் சென்னையில்
முன்னோடியான கடைகளும்
முதன்மையாய் தமிழ் நூல்களை
முதற்கண் முன்னிறுத்தாததால்

முடியாது நின்றேன்
மூச்சு வாங்க !!

முனைவரின் மூதாதையர் ஊர்
முன்னைக்கு இப்போது
முற்றும் மாறா சோழவந்தான் !!
சோழவந்தான் எனும்
சேமமிகு ஊர்விட்டே

எனது மாமனாரும்
என்றோ சென்னைக்கு வாழவந்தார் !

எனது விசனத்தை
எனது மாமனாரிடம்
எளியேன் நான் அளக்க....
ஞானசம்பந்தன் யாரென
நச்சென்று நாலு வரியில்
நயமாய் நான் விளக்க....

தொல்லை விடு !
முடியவில்லை எனும்
சொல்லை விடு !

என..
தந்தார் எனக்கு மாமனார்
தனக்கே உரிய ஆசியை !!
எடுத்தார் தொலைபேசியை !!

அச்சகம் அச்சகமாக
அனேக எண்களை சுற்றினார் !!
ஏரார்ந்த விஜயா பதிப்பகத்தை
எவர் மூலமோ
என்னணமோ
எளிதாய் பற்றினார் !!

அறிஞர் ஞானசம்பந்தனின்
அனைத்து புத்தகங்களும்
அடுத்த நாளே
அடியேன் கையில்
அடங்கின !!

இனிய என் மாமனார்
இரண்டாவது பிரதியோடு
இரண்டறக் கலந்ததால்...

புத்தகம் படித்தல் எனும்
புண்ணியக் கலையை...

இருவர் இல்லமும்
இனிதே தொடங்கின !!

”முனைவரின் தந்தையாரது
முதற்பெயர் குருநாதன் !!
தருமமிகு சோழவந்தானில்
தவசீலர் அவரே
தனக்கும் தம்பியருக்கும்
தமிழ் போதித்த குருநாதன் !!”

என்று
என் மாமனார் அறிய. .
எண்ணிலா வியப்பில்
எல்லோர் கண்ணும் விரிய...

முனைவரின் தந்தையை நினைந்து
மாமனார் ஒற்றினார் கண்ணை !!
முனைவர் இல்லத்துக்கு
சுற்றினார் எண்ணை !!

இனிய பழங்கதை
இருவரும் பேசியிருக்கின்றனர்
ஆசை தீர...
இடையே என்னைப் பற்றியும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இனிய மாமனார் கூற...

அடித்தது தொலைபேசி
அடியேன் இல்லத்தில்
அனேகமாய் மதியம் இரண்டளவில் !
அமர்ந்தது அளவொண்ணா வியப்பு
ஆரென்று கேட்ட உதட்டுப் பிளவில் !!

அரை நொடியில்
அடிமொத்தமாய்
அற்றுப் போனது
அடியேன் சுவாசம் !!

என்ன பேசுவது
என்று அறியாது
எக்கச்சக்கமாய் பிய்ந்தது
என் தலைக் கேசம் !!

தண்டோரா கேட்ட
தருமியாய் நான்
தனித்துப் பதற...
கையும் காலும் உதற....

”தத்தக்கா பித்தக்கா” வென
தமிழ்ப் புலவரொடு
தமியேன் நான் பேசினேன்
தடுக்கித் தடுக்கி
தமிழ்ச் சொல் இரண்டை !!

ஏடாகூடமாய்
ஏதாவது நான் பேசாதிருக்க
ஏழுமலையானை வேண்டி

பெற்றவள் தேடினாள்
பெற்ற வயிற்றுக்கு பிரண்டை !!

சுருக்கமாய் இரு வார்த்தை
சுடச் சுட பேசி..

”அமெரிக்கா வந்தால்
அவசியம் எம்மில்லம் வாருங்கள் !!
அடியேனுக்கு புகழ் சேருங்கள் !! “
என..

வடிவாய்ச் சொல்லி
வைத்தேன் தொலைபேசியை !!
விழியில் விழுந்தவள்
விரைந்து வைத்தாள்
வியர்த்த உடம்புக்கு “ஏசியை” !!

மானுடமே !
மறுபடியும் சொல்கிறேன்
மகான் வள்ளுவனின்
மகத்தான வாக்கு பொய்க்கவில்லை !!

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து


நிறையப் படிக்காத
நிரட்சரகுட்சியாம் என்னை
நலமா? என

ஞாலம் போற்றும்
ஞானசம்பந்தன் கேட்டது

அவரது பணிவுக்கு
அத்தாட்சி !!

அடியேன் அகத்திலும்..
அவதரித்த அகத்திலும் ..

அனேக நாள் ஓடும்
அக் காட்சி !!

தியாகராஜர் கல்லூரியில்
போதித்தும்...
தனித்து சாதித்தும்...

எடுத்த பணிக்கோர்
எடுத்துக்காட்டாக...

நாளெல்லாம் தொடர்கின்றார்
நானிலத்தார்க்கு
நான்கு வார்த்தை
”நகைச்சுவையோடு” நல்கி !!
வாரந்தோறும்
வாசித்து மகிழ
வாங்குங்கள் இன்றே கல்கி !!

Labels: , , ,

Monday, August 24, 2009

தோல்வி நிலையென நினைத்தால்..

ponting

ஊரெங்கும் வெடிச் சத்தம் !!
உனது வாயிலோ
உலர்ந்து போன ரத்தம் !!

இருக்கிறது வெற்றிக் களிப்பில்
இங்கிலாந்து !!
எவன் எம்மை
எதிர்ப்பான் இனி
என இறுமாந்து !!

நின்று மோதினீர்
நீவிர் இருவரும்
ஒன்றுக்கு ஒன்றாக !!
நிதானமிழந்தீர் இன்று
"இரண்டுக்கு – ஒன்றாக” !!

போதாததற்கு உலக வரிசையில்
போயிருக்கிறீர் நான்கிற்கு !!
போதாதா இது
போதும் நரம்பில்லாது பேசும்
போக்கற்ற நாக்கிற்கு ?!

இரண்டாயிரத்து ஐந்தை மாற்ற
இருந்தது உன்னுள் தாகம் !!
இருப்பினும் இன்றோ
இரு விழியிலும் சோகம் !!

நண்பரே !!
ஆட்டத்தின் போக்கை மாற்றும்
ஆட்டக்காரர் இல்லை
ஆசியணியாம் உன்னணியில் !!

எவரை நீ
என்னணம் செயிப்பாய்
இத்தகு பின்னணியில் ?

அணியில் இல்லை
அணுவளவும் பலம் !!
எவர் தான் பார்க்கார்
எந்நாளும் நிலம் ?

தனியாளாய் உனது சாதனைகள்
தந்திருக்கிறது எமக்கு
தாளா வேதனைகள் !!

இரண்டாயிரத்து மூன்று
இறுதியாட்டம் போதும்

தரணி உந்தன்
தரம் அறிய !!
வியப்பில் இரு
விழி விரிய !!

பெயருக்கு பின்னால்
போட்டுக் கொள்ள உண்டு
முப்பத்து எட்டு செஞ்சுரிகள் !!
மெனக்கெட்டு அவற்றை
மெச்சியிருக்கின்றன நாளும்
மேதினியின் தினசரிகள் !!

உருட்டுகின்றன அவை இன்று
உந்தன் தலையை !!
நிர்ணயிக்கின்றன உன் பதவிக்கு
நியாயமான ஒரு விலையை !!

அவனிக்கு சொல்வேன்
அறுதியிட்டு ஒன்றினை !!
ஆட்டத்தில் விறுவிறுப்பு கூட்ட
ஆசியணிக்குண்டோ இன்றிணை?

ஐந்து நாள் ஆட்டத்தை....
அதன் மீது
அவனிக்கு இருந்த
அளவில்லா நாட்டத்தை....

அசாத்தியமாய் மீட்டுத் தந்தது
ஆசி அணி !!
அதில் உண்டு உந்தன்
அளப்பரிய பணி !!

“வா” தந்த பதவியை
“வா” என்று அள்ளி...
குறைகளை தள்ளி...

செதுக்கினாய் நீ
செம்மையாய் ஒரு அணியை !!
ஒதுக்கியது அது
ஒரு நாள் போட்டியோடு
ஒன்றிய சனம்
ஒதுக்கிடும் ஐந்து நாளையெனும்
ஒவ்வாமைப் பிணியை !!

அவனியோர் நாவில்
அத்தமித்தது "டிரா" !!
பெருமையை
பெருமளவில் சேர்த்தார்
"வார்ன் – மெக்ரா" !!

காலப்போக்கில் அவர்கள்
குல்லாயைக் கழற்ற....
இல்லை உன்னிடம்
இருவராகிலும் இன்று
கையை சுழற்ற !!

எடுத்தவுடன் இருவர் வீழ்ந்தாலோ
எடுத்த ஓட்டம் தாழ்ந்தாலோ

உன் அணி கையை
உதறுகின்றது !!
அடுத்து என் செய்ய என
அரண்டு பதறுகின்றது !!

உன்னை
உன் அணியை
உள்மூச்சாய் வெறுப்பவர்

உண்மையில் உம்மை
உயர்வாய் நினைக்கின்றார் !!
ஆயினும் ஏனோ
அல்லும் கனைக்கின்றார் !!

காழ்ப்புணர்ச்சிக்கு காரணம்
களத்தில் எதிரணியினரோடு
கட்டுப்பாடின்றி உம்மவர்

கணமும் பேசும்
கணக்கில்லா வசைகள் !!
விலா நோக சேர்த்த புகழை
வினாடியில் தீர்க்கும் விசைகள் !!

இதனை நீ
இனி சிறிது மாற்று !!
வீசும் உன் பக்கம்
வெற்றிக் காற்று !!

இந்திய அணி
இருக்கிறது இன்று வரை

”மூப்பை மறந்த
மூவேந்தர்”
கோப்பை அள்ள என

"நேற்றை" விற்று !!
நீவிர் விதைத்திருக்கின்றீர்
நீண்ட பலன் தரும்
"நாளைய" வித்து !!

எதிர்காலத்தை
எத்தடையுமின்றி
எதிர்நோக்கும் உன் பத்து !!
சீர் செய்யதனை
சீக்கிரம் சேரும் சம்பத்து !!

இருக்கலாம் கண்ணீரில்
இன்று கங்காரு !!
இனி கலக்கப் போவது
இங்காரு ?

Labels: , ,

Wednesday, August 19, 2009

டி. கே. பி

dkpattammal

அழுது அரற்றுகிறது ”தாமல்” !!
அமைய முடியவில்லை அதனால்
அனுதினம் வருந்தாமல் !!

ஊர் பெயர் முன் கொண்ட
ஊர்ப்பட்ட பெயருள்

உதித்த ஊருக்கு
உச்சப் புகழ் சேர்ப்பவர்
உன்னதமான ஒரு சிலரே !!
உதிர்ந்துவிட்டது சமீபத்தில்
உயர்ந்த சங்கீதத்திற்கு
உதாரணமாய் வாழ்ந்து
உலகெங்கும் சுகந்தம் வீசிய
உவமிக்க முடியாதொரு மலரே !!

பட்டொளி வீசிப்
பறந்த அம்மலரின்
பட்டப் பெயர் ”பட்டா” !!

ஆண்டு பல முன்
ஆற்றிய அருஞ்செயலால்

அவனிக்கு தந்தாள்
அப்பெண்

தன்னொத்த ஏனைய பெண்களும்
தனித்து மேடையேறலாம் எனும்
தகத்தகாயமான பட்டா !!

சங்கீத மேடையில்
சமத்துவமும் - அதன்
மகத்துவமும்...

“என்ன பெரிது” என
எகத்தாளமாய் இக்காலத்தில்
எதிர்நோக்கப்படும் ஒன்று !!

வழி வந்த
வரலாற்று பாதையில்
விழி வைத்தால்
விலாவாரியாகப் புரியும்

அக் காலத்தில் அது
அதுவாக அமைந்தது அன்று !!

ஆணுக்கு பெண்
ஆண்டாண்டு காலம்

உருவளவில்
உலகளவில் பேடை !!
தாமாக வேண்டியும்
தாண்டியதில்லை வீடை !!

சுதந்திரத்துக்கு முன்
சரி சமமாக பெண்களும்
சம்மணமிட்டு பாட...

சற்றும் அனுமதித்ததில்லை
சரிகமபதநி தவிழ்
சங்கீத மேடை !!
சமுதாயத்துக்கு அவள் காலமும்
சந்தோஷக் கூடை !!

ஏழு சுரத்துள்
எட்டு முழமும்
ஒன்பது கஜமும்

நேருக்கு நேர் என
நினைந்ததில்லை அனேகம் பேர் !!
ஆழமாக ஓடவில்லை அதனால்
கர்நாடக சங்கீதமெனும்
கற்பகத் தருவின் வேர் !!

டி. கே. பி எனும் மூன்றெழுத்து
சமவாய்ப்பை பிரகடனப்படுத்திய
சான்றெழுத்து !!

பல வழக்கொழிந்த தாளங்களில்
பல்லவி பாடி
”பல்லவி” பட்டம்மாள் என
சாற்றப்பட்டவர் !!

எம். எஸ். எஸ்
எம். எல். வி
டி. கே. பி என

பெண் மும்மூர்த்திகளில் ஒருவராய்
பெரிதும் போற்றப்பட்டவர் !!

அந்நியன் இந்தியனுக்கு
கை கட்டிய நாள்...
எட்டு திக்கும் வெற்றி
எட்டிய நாள்.....

எண்ணளாவிய ஆனந்தத்தில்
”வெற்றி எட்டு திக்கும் எட்ட”
கொட்டிய முரசு !!
வாழ்ந்த காலம் வரை
வாஞ்சையாய் வழித்தோன்றல்களை
வழிநடத்திய சிரசு !!

இறக்கும் வரை
இம்மியும் பிறழாத
இழுத்துக் கட்டப்பட்ட சுரத்தானம் !!
இசைக்கு இல்லை
இன்னதென்று எல்லை என
கலைஞானிக்கே உணர்த்திய
கண்ணியமான கானம் !!

டி. கே. பி
டி. கே. ஜே

ஓர் குளத்தில் பூத்த
ஈர் அல்லி !!
ஆறுமோ சங்கீத உலகு
அழுத்தமான உச்சரிப்புக்கு
அடுத்த உதாரணமாக
ஆரையேனும் இனி சொல்லி ?

திகட்ட திகட்ட இருவரையும்
தினம் கேட்டும்
தீராது எனது அவா !!
இனி வரும் காலத்தில்
இழப்பை ஈடு செய்வரோ
நித்யஸ்ரீ /விஜய் சிவா ?

Labels: , , , ,