Tuesday, August 21, 2018

வாணி...

1)
வெண் கமலத்தே வீணையோடு வீற்றவளை
வெண்பாவிற்கு கேட்டேன் வழி - தண்
கண் சிமிட்டி காட்டினள் உபாயம்
எண்ணியதும் வந்தது பண்.

2)
ஏணியின்றி இல்லை ஏறுதற்கு உதவி
தோணியன்றில்லை நதி தாண்டுதல் - கழனி
காணியின்றி இல்லை நல் வாழ்வோ
வாணியின்றி இல்லை யாமே

3)
சொல்லை தருபவளுக்கு சுடர் ஏற்ற
இல்லை கூத்தனூரன்றி கோவில் - ஆதலின்
உளமே ஆலயமாய் வளமாய் வாணியை
வாயார வாழ்த்திப் பாடு

4)
நான்முகனின் இல்லாள் நாரதனை ஈன்றாள்
நயத்தகு சொல்லாள்; நல்லாள் - அறிவிலி
கல்லாரைத் தள்ளாள்; பொல்லாரைப் பேணாள்
கலைமகளை போற்றிப் பணி

5)
உயர் கலைகள் எட்டெட்டின் பிறப்பிடம்
துயர் கல்லாமையின் இறப்பிடம் - ஆனிப்
பொன் குணங்களின் ஒளிர்விடம் ஆங்கண்
என்றும் வீற்றிருப்பாள் வாணி

6)
மகதி வீணையோனின் தாய் கல்லா
அகதிகளை காப்பாள் நலமாய் - நெஞ்சச்
சகதி களையும் சரஸ்வதியின் புகழை
நற்கதி அடைய நினை

7)
சொற்புகழ் தருபவள் அன்னத்தில் வருபவள்
கற்பு நெறி மிக்கவள் - கலைவாணியாள்
நற்புகழை நாளும் நாவார நன்னெறியுடன்
தற்புகழை விடுத்துப் பாடு

8)
உற்றவன் உலகத்தை உருவாக்குவான் தான்
பெற்றவன் கலகத்தை உருவாக்குவான் - கச்சபீ
யாழ் மீட்டுவாளை நெஞ்சார நினைக்கின்
வாழ்வின் முரண் விளங்கிடும்

9)
ஞானத்தின் முதல்வி நாமகளின் வாரிசோ
கானத்தின் முதல்வன் காணீர்! - வானே
போற்றும் வாகீசுவரியை பூசிக்க தானே
தோற்றுப் போகும் துயர்

10)

நயத்தகு நாதத்தில் புத்தகத்தில் பதத்தில்
வியத்தகு வேதத்தில் வீற்றவள் - மனச்
சுமை களையும் சுகமருந்தாம் கலைமகளை
இமைப்பொழுதும் நினைவில் இருத்து

11)
பன்னீர் வேண்டாம் பட்டாடை வேண்டாம்
நன்னீராடி வெண்ணீறணி நாளும் - பேச
நாச்சொல் வைத்தாள் நாமகளை வேண்டிட
பாச்சொல் ஒன்று போதுமே

12)
சாவித்திரியாய் சரஸ்வதியாய் காயத்திரியாய் ஜகதீஸ்வரியாய்
மேவியிருப்பாள் சிருங்கேரியில் காண் - அனைத்திலும்
ஆயாய் அவளே அமைந்திருக்க அறிந்திலதை
ஆயாய் நீ அருமனமே

Labels: , , , ,

ஏழு சுரங்களுக்குள். . .



நிமிர்ந்து நிற்கிறது
எந்தன் தலை !!
நிலை கொள்ளக் காரணம்
இரட்டை இலை !!

செவிக்கு உணவு கேட்டார்
செறிவோடு பெருமையுற....
செய்யாதார் சிறுமையுற....

செயற்கரிய செயலை
செம்மையாக
செய்து முடித்திருக்கிறது
“செயா” தொலைக்காட்சி !!
வசந்தம் வருமுன்னே
வந்தது நமக்கு மீட்சி !!

“Carnatic Music Idol” என்ற
அஷரங்களின்
அரசன் யார்? எனும்
அர்த்தம் உள்ள
அந்த போட்டி

நம் சமூகத்திற்கு
நல் வழிகாட்டி !!

”தைவதத்தில் துவங்கு !
நிஷாதத்தில் நிறுத்து !! “

”விளம்ப காலத்தில்
கிளம்பு !!

துரித காலத்தில்
துவளாது சுரங்களை விவரி !!
காணாமல் போகாதே
வழி தவறி !! “

”கணக்கோடு தாளத்தை
கச்சிதமாய் போடு !!
கணீரென பாடு !! “

”நற்றுணை” நமச்சிவாயமே எனும்
நம்பிக்கையை நாம்
நாளும் மறவாதிருக்க
நற் பொருளோடு
நற்றவற்றவர் இயற்றிய
நலமிகு பாடலை

நயமாக பாடாத
நினது சாமர்த்தியம் என்ன ?

திரும்பச் சொல்
திருத்துகிறேன் நான்
சாகித்தியம் என்ன ?

”ஆறில் ஒருவனே !!
போட்டியாளரில் சிறுவனே !!

மக்களின் எச்சரிப்பென்ன ?
நீ பாடிய ஷண்முகப்ரியாவில்
நிஷாதத்தின் உச்சரிப்பென்ன ?”

”சுட்டிப் பெண்ணே !
குட்டிப் பெண்ணே !!

முதலிடம் உனது தேடல் !!
முகவரி மறக்கலாமா
உந்தன் பாடல் ?!

சுரம் அதன்
தரம் விடுக்க

போனாள் ”நாயகி” ”தர்பாருக்கு” !!
போதோடு நீ
போகலாம் இனி ஊருக்கு !!

ஜதியினின்று வழுவாதே !!
நாங்கள் உன் மீது வைத்த
நம்பிக்கையினின்று நழுவாதே !!

என...
வகைக்கேற்ப
வளரும் கலைஞரை

வளர்ந்த கலைஞர்
வறுத்து எடுத்தார் !!

கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
கேட்டார் களிப்புற
போட்டியாளர் பாடலால்
பதில் கொடுத்தார் !!

திரும்பிய பக்கமெல்லாம்
திரளாக வந்த சுரத்தில்

அடைந்தேன் நான்
அளவிலா திளைப்பு !!
அகன்றது என்
”அந்த நாளும் வந்திடாதோ” எனும்
அங்கலாய்ப்பில் வந்த களைப்பு !!

ஆழ் மனதில்
ஆழங்கால் பதிக்குமாறு
எண்ணங்கள் சில
எங்கிருந்தோ உதிக்கின்றன !!

நம் பலத்தை
நாம் ஆராய வேண்டும் எனும்
நற் சிந்தையை அவை
நம்முள் பதிக்கின்றன !!

Sunday, April 14, 2013

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...










மறலிக்கு வந்தது
மயக்கமா ? கலக்கமா ?

இசைமிகு இசையே
இயமனின் இன்றைய
இலக்கமா ?

சுப நாளில்
சுரக்கலாமா
சுபபந்துவராளி சத்தம் ?

இசை வானில்
இன்றெதற்கு
இருள் யுத்தம் ?!

ஸ்ரீனிவாசனை இன்று
ஸ்ரீனிவாஸ் நாடிவிட்டார் !!
நாடியதால் இன்று
நாடி விட்டார் !!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நெஞ்சம் மறப்பதில்லை !

நிலையில்லா உலகில்
நிதம் புகழ் இறப்பதில்லை !!

Saturday, April 13, 2013

விஜய...

வருகிறாய் நீ 
வருடா வருடம் !

வருவதில்லை மனதை
வருடா வருடம் !! 

சிரக்கம்பம் செய்யுமாறு 
சித்திரைக்கு சித்திரை

புத்தம் புது தொடக்கத்தின்
புதியதொரு முத்திரை !!

நல்லோர்க்கும் எல்லோர்க்கும் 
நலம் பல நல்கிய  
நந்தன வருடமே !!

"விஜய"த்தின் விஜயத்தால்
விரைவாய் நீ விடைபெறு !!

விஜய வருடமே! -
விரைந்து நீ
விசனிக்கும் மக்களின்
விலகாத் தடையறு !!

தோல்வியைப் பெயர் !!
அதனால் அன்றோ 
அறிவுசால் ஆன்றோர் 
அளித்துள்ளார் உனக்கு 
"விஜய" எனும் பெயர் ?

Friday, March 29, 2013

முடிவில் ஒரு தொடக்கம்….

தொன்றுதொட்டு நீ
தொழிலில் தீப் பந்தம் !!
எமக்கும் உனக்கும்
எண்ணற்ற வருட பந்தம் !!

எப்படிச் சொல்ல என
எமக்கு நா வரவில்லை !!

நீ அறிவாய்
நிறைய வருடங்களாய்
நிறுவனத்திற்கு நிரம்ப
வரவில்லை !!

வர்த்தகத்தில்
வரவிலிருந்து செலவு போக
வருகிறது லாபம் !!
வரவின்றி செலவிருப்பின்
வராதோ பலருக்கு கோபம் ?!

இதன்றி..
விரைந்து நிறுவனத்தை
விற்க வேண்டிய நிலை !
எவர் தருவார் இதற்கு
எக்கச் சக்க விலை ?

விலையைக் குறைக்க
தலையைக் குறை என

அன்றாடம் மேலிடம்
ஆவன செய்யுமாறு குரைக்க..

விழைகிறோம் நாங்கள்
விரைந்து செலவை சிரைக்க !!

கடைநிலை ஊழியர்
கணக்கற்றவர்க்கு
கடைசி நாள் அறிவிக்கப்பட்டது

இரண்டு மாதம் முன்னம் !
இற்றை நாள்
இந்நிறுவனத்திற்கு
இழிநிலையே சின்னம் !!

பிரஜையில்லா ராஜ்ஜியத்தில்
பிரதம மந்திரிக்கு என்ன
பிரமாதமான வேலை ?

மேலாண்மையைக் குறையென
மேலிடத்தினின்று இன்று
மேம்போக்காய் உத்தரவு !!
எவர் ஊழியத்திற்கு இனி
எவர் தான் உத்தரவு ?

இன்றைய பதினைந்தாம் நாள்
இங்குனது வேலை முடிகின்றது !!
சொல்லுங்கால் நெஞ்சில்
செம்புனல் வடிகின்றது !!

என்றும் எம்மை
நினைவில் கொள்க !!
எஞ்சியதை மனித வளத் துறையில்
என்னவென்று கேட்டு
எண்ணத்தில் கொள்க !!

 ***-****-*******_*********_********_********
கண் இடுங்க
கை கால் நடுங்க

உலகம் இருண்டு
உடல் மருண்டு

இல்லம் சேர்ந்து
இமைப் பொழுதில் சோர்ந்து

கண்ணீரும் கம்பலையுமாய்
கனவெல்லாம் கவலையுமாய்

நயமொடு தகவல்
நண்பர்க்கு தந்து...
நடந்ததை நினைந்து
நெடுநேரம் வெந்து...

நண்பகல் நடுநிசி மறந்து..
துயரின் துக்கத்தில்
துயில் துப்புர
துறந்து..

பட்ட வேலைக்கு
பட்ட இடத்தில் விண்ணப்பித்தேன் !!

Resume எனப்படும்
தொழில் அனுபவத்தை
தொடர்ந்து புதுப்பித்தேன் !!

தினம் தெய்வத்தை வந்தித்தேன் !
திரளாய் பலரைச் சந்தித்தேன் !!

சினமும் சோகமும்
சிறிது சிறிதாய் ஆறியது !!
பக்குவப்படுத்தியது
பண்பட்ட பலர் கூறியது !!

”சமயத்திற்கு ஏற்ப
சர்ப்பம் உரிக்கின்றது
சட்டையாய் தனது தோலை !

உன்னைப் புதுப்பித்துக் கொள்ள
உதவும் புதிய வேலை !!

ர் பணியிலிருந்து
ஓய்வுறல்

இன்றைய தேதியில்
இலேசில் சாத்தியமில்லை !!

தத்தியோனமன்றி தெய்வத்திற்கு
தினம் வேறா நைவேத்தியமில்லை ?

இது புதியதொரு தொடக்கம் !!
இனி வரும் வாழ்க்கை
இதனுள் அடக்கம் !!

முதற்கண் மறந்திடு தீதை !
முன்னே விரிகிறது
முன்னேற்றத்தின் பாதை !!

பழைய வேலை
படித்து முடித்த காதை !!

பெருமையாய் புதிய பணியில்
பெரும் பெயரெடுக்க
பல கருத்தினை உள்வாங்க
பழக்கு உன் காதை !!

உனக்கன்றி வேலை
உலகத்தில் எவர்க்கு ?

விதியின் செயலால்
விவரிக்க இயலா அவலம்
விளையவில்லையா முன்னம்
விசுவாமித்திரனெனும் அருந்தவர்க்கு ? "

உற்சாகச் சொற்கள்
உற்றார் உறவினரிடமிருந்து
உடனுக்குடன் வந்தன !!
உள்ளத்திற்கு ஏற்றம் தந்தன !!

இருப்பினும் சித்தம்
இலகுவாய் பக்குவப்படவில்லை !
முயன்றும் கோபம்
முடிவாய் விடவில்லை !

உன்னிப்பாய் உணர்ந்து
உளவியலாளர் விவரிக்கின்றார்
உத்தியோகம் இழந்தாரது
உள நிலையை !
உலகத்தில் பலருக்கு
உள நிலையை !!

தரமற்ற தெருக் குப்பையாய்
தள்ளப்பட்ட அதிர்ச்சி…
முன்னுக்கு வர
முழக்கப்பட்ட வழியாய்

முடிந்ததே இன்றோடு
முந்தைய வேலை எனும்
முற்போக்கு முதிர்ச்சி…

நமக்கா? எனும் மறுப்பு
நமக்கே! எனும் வெறுப்பு

நம் வாழ்க்கை
நமதே எனும் பொறுப்பு
விடாமுயற்சியுடன்
வினை தேடும் சுறுசுறுப்பு

பதற்றத்தால் பசியின்மை
பயனற்று உணரும் தன்மை

வேலையிழந்தார்க்கு இவை
வேதனைக்குரிய அறிகுறிகள் !!
வேலையும் ஆலையுமே அவர்க்கு
வெண்ணை வைத்த உறிகள் !!

*******-----***********_***********_***********
பனி தொடக்கமும்
பணி முடக்கமும்

உற்சாகத்தை முடக்குபவை !
உத்வேகத்தை அடக்குபவை !!

”நாடும் வீடும்

நாளும் சிறக்க

விடாமுயற்சியோடு இடையறாது
வினைக்கு முற்படுபவன் முன்

இடும் பணி செய்ய
இறைவன் நிற்பான்
இடுப்பாடை மடித்துக் கட்டி”

வள்ளுவன் வைக்கின்றான்
வகையான வாக்கை  

குடி செயல் வகையில் !!
அவ்வாக்கிற்கு மிகையில் !!

ஆயிரம் அவற்றை படித்து
ஆழங்காற்பட்டிருப்பினும்

நமக்கென வருங்கால்
நம்பவும் நகவும் முடிவதில்லை !!

வலியறிதல் வாசிப்பினும்
வலி நெஞ்சுள் வடிவதில்லை !!

”தேசத்தில் வேலையிழந்தோர்.."
முன்னம் நாள் வரை
முக்கிய மாலைச் சேதி !

இங்கு அதில் நாமுண்டு
இன்றைய தேதி !!”

என எண்ணுங்கால்..
எண்ணம் பதறும் !!
எண் சாண் உடம்பு
எந்நேரமும் உதறும் !!

காணச் சகியாது
கவின்மிகு மழலையர் முகம் !!
களையிழக்கும் கணப்போதில்
கண் கவர் அகம் !!

நாடித் துடிப்பு
நாளும் தெறிக்கும் !!
நம் திறன் மீது
நம்பிக்கை குறைய
நம் கனவை பறிக்கும் !!

அரங்கனும்
ஆதி வராகனும்
தல சயனும்
திருப்பதி ரமணனும்

தொழுகையிலும்
அழுகையிலும்

நிறையவே நிறைந்தனர் !!
ஏதேனும் செய்ய
ஏக காலத்தில் விரைந்தனர் !!

வெள்ளம் வடிந்தவுடன்
வெளிப்படும் நாணல் !!
அவ் வகையில் வந்தது
அவசரமாய் ஓர் நேர்காணல் !!

----***_____***______*****_____****________________*****
எமக்கு சன்மானம்
என்றும் தருகின்றது விமானம் !!

விரைவு வாழ்க்கையில்
விரைந்து செல்ல
வேறுண்டோ அதற்கு சமானம் ?

பலதரப்பட்ட ஆணிகள்....
பளிங்காய் ஒளி பொருந்திய
பகட்டான ஏணிகள்....

உணவினை பதப்படுத்த
உடன் உதவும்
உயர்ரக குளிர் சாதன
உறை பெட்டிகள்...

கண் கவர்
கழிவுத் தொட்டிகள்...

பறிமாறப்படும் பருக்கைகளை
பதமாய் சூடாக்கும் அடுப்புகள்

வகுப்புக்கு ஏற்றவாறு
வகை வகையாய் இருக்கைகள்
பணிப்பெண்டிர் ஓய்வெடுக்க
பதமான படுக்கைகள்

இவை எமது தயாரிப்பு !!
இலட்சோபலட்சம் பயணியர்க்கு
இவற்றால் பூரிப்பு !!

ஆதி நாளில்
ஆகாயம் ஏறிய

எண்ணற்ற விமானம்
எக்கச்சக்க கனம் !!

எது எப்படி இருப்பினும்
எல்லா நிறுவனமும்
எங்கும் தேடுகின்றன
எரிபொருள் சிக்கனம் !!

முரணான இந்த தேடல்
முன்னேற்றத்திற்கான எமது
முக்கியப் பாடல் !!

விமான உற்பத்தியாளரும்
விமான நிறுவனங்களும்

இலேசான பாகங்களுக்கு
இரந்து நிற்கின்றார்
இங்கு எம்மை நாடி !!

உலகமே அறியும்
உதிரி பாகங்களே எமது
உயிர் நாடி !!

மூன்று வருட விற்பனையை
முக்கிய நிறுவனங்கள் பல
முன்னேற்பாடாக எம்முடன்
முன் பதிவு செய்துள்ளன !!

இதனால் எம் தொழிலுக்கு
இப்போது வித்தரிப்பு !!

உணர்ந்தோம் நாங்கள்
உனது வேலைக்கு
உற்ற கத்தரிப்பு !!

அந் நிறுவனத்தே செய்த
அரும்பணியை
அறிவோடு இங்கு செய்க !

ஏரார்ந்த எம் நிறுவனத்தை
ஏக காலத்தில்
ஏற்றப் பாதையில் எய்க !!

வந்தது வேலைக்கான ஓலை !!
வடவரை நின்ற இறை
வழங்கினான்
வசந்தத்தோடு காலை !!

பீதாம்பரனை பிரார்த்தித்து
பீடு நடையோடு
B/E Aerospace ல்

ஒன்றிப் பணி செய்ய
ஒன்றாம் தேதியில்
ஒருங்கே வைக்கின்றேன் காலை !!

செய்யும் வேலை
செம்மையோடு செழிக்க
செறிவொடு சேவிக்கின்றேன்
செந்தூரன் வேலை !!

Tuesday, October 16, 2012

வீழ்ச்சி

தலைவர் கை
தண்ணீர் குடித்தும்

தலைமுறை தலைமுறையாய்
தீர்ப்புக்கும் தீர்வுக்கும்
சாட்சியாய் சமைந்தும்

வெட்டினால் வேல்கம்பு
வீழ்த்தினால் விறகு என
வீர முழக்கமிட்டும்

ஊராரின் விலாசத்தில்
ஒரு வரியாகியும்

சாதல் காதல் மோதல்
சலிக்காது கண்டும்

தறி கெட்டு ஓடி
பொருதி மாண்டாரோடு
பொறுமை காத்து
புகைப்படத்திற்கு நின்றும்

செத்தோரை எண்ணும்
செய்தி இல்லா
செய்தித்தாளில்

பிழைத்தோர் கணக்கில்
வரவு வைக்கப்பட்டும்

வெறும் நிழல்
வெந்தழல்
வேறுபாடு வலியுறுத்தியும்

காலம் காலமாக
கல்லடி கண்டும்
காற்று சாதகமாகும் என
காயத்தை காயவிட்டும்

மஞ்சள் குங்குமத்தோடு
மங்களகரமாய்
கண்டிராக் கூட்டம்
பெண்டிராய் துதித்தும்

கல்யாண வரன்
கைக்கு காசு
ரோடு டெண்டர் என

மஞ்சள் துணியில்
மடித்த மசோதாவை
மடியில் தாங்கியும்

பாட்டில் போற்றப் பட்டும்
ஏட்டில் ஏற்றப் பட்டும்

அரசளித்த எண்ணை
அனுதினம் அணிந்தும்

முதியோர் விடுதிக்கா ?
மனநல விடுதிக்கா என
விலை பேசப்பட்டு

துயரில் துக்கித்தது
தானே புயலில்
தானாய் வீழ்ந்த மரம் !

Thursday, October 11, 2012

எங்கோ வாழ்க்கைப் பயணம்..


மூன்று நாள் முன்னம்
மூன்றுக்குள் வா என
மூதுரை வாங்கிய
மூன்று சக்கர வண்டி
மூச்சிரைக்க வாசலில்

ஏக காலத்தில் எழும்
எமகண்ட ராகுகால
எச்சரிக்கைகள்

புறப்படு பொழுதோடு என
புகலப்படும் நச்சரிப்புகள்

போவது போருக்கா
ஊருக்கா என வினவுமாறு
நெற்றியில் இடப்படும்
வீரத் திலகம்

’போனதும் போடு பதில்
உடம்பைப் பார்த்துக் கொள்
சமர்த்தனாய் படி’
ஆதிநாள் தொட்டு
ஆழங்காற்பட்ட அறிவுரைகள்

என்றும் இல்லாது
எல்லோருக்கும்
எங்கிருந்தோ தலைகாட்டும்
ஏக்கமும் பாசமும்

என்றோ திரும்புகையில்
எடுத்துச் சென்றதை
எடுத்து வருவதற்கும்
உடன் வந்தது
உள்ளதா என்பதை
உடன் உரைப்பதற்கும்
உடைமைகள் குறிப்பு

வழியில் வாசிப்பதற்காக
வாங்கப்படும்
வாரப் பத்திரிகைகள்

வழிபாட்டோடு
வழிப் பிள்ளையாருக்கு
படைக்கப்படும்
உடைக்கப்படும்
கடைத் தேங்காய்கள்

வேராழமா
பேராழமா தெரியாது
சேமநலம் பாராது
சேற்றை ஒட்டியே நிறுத்தப்படும்
சொகுசுப் பேருந்து

உட்காரு முன்
உட்காரும் உடைமைகள்

எல்லா நாள் ஓடியும்
என்றும் ஓடாதது போல்
துடைக்கப்படாத இருக்கைகள்

பிற இருக்கைகள் பளபளக்க
தனது மட்டும் பிய்ந்திருக்கும்
தாளொணா தரித்திரம்

முன்னம் இருந்தோரது
முன்வினை சொல்லும்
பெருக்கப்படாத தரைப் பலகை

இது எனது
இருக்கை எனும்
கேட்டுப் புளித்த சர்ச்சை

ஏதேனும் மறந்தோமோ என
வந்து வந்து போகும் கவலை

வளைவுகளுக்கு உதவும் என
பக்கத்து இருக்கைதாரர்
பத்திரப்படுத்தும்
பெட்டிக் கடை எலுமிச்சை

விழுந்து விடுமோ என
வினாடிக்கு வினாடி
விழி வைக்கப்படும்
தலை மேல் அமர்ந்த
பிறரது மூட்டைகள்

தூரத்தில் முணுமுணுக்கப்படும்
ஆதித்ய ஹ்ருதயமும்
அனுமான் சாலீஸாவும்

சொறி சிரங்கு களைய
மூலம் பவுத்திரம் மறைய
இல்வாழ்க்கை இனிக்க
இட வலமாய் சுவரொட்டிகள்

இல்லாக் கட்சிக்கு
இருக்கும் இடங்களிலெல்லாம்
இறக்கை கட்டிப் பறக்கும்
இலட்சியக் கொடிகள்

தனியார் என்றாலும் இதன்றி
இனி யார் என
அரிசி மூட்டை ஏற்ற
அடுக்கப்படும் கெஞ்சல்கள்

இறங்கும் இடத்தில்
இனி பிற
எனும் வேளையில்
எதிர் வண்டியில் தெரியும்
”எங்கேயும் எப்போதும்”

பக்கத்தில் இருப்பவன்
பதவிசானவனா எனும்
பதிவிரதைகளின் கண்ணோட்டம்

ஒவ்வொரு மகவும்
ஒவ்வொரு மூலையில்
ஒவ்வொரு செய்கையில்
ஒவ்வொன்றை மென்று இருக்க
“ஈன்று புறந்தந்த” களிப்பில்
ஒய்யாரமாய் அமர்ந்த தாய்

எல்லா பயமும் தேக்கி
எப்பயமும் இல்லாதது போல்
தூங்க முயலும்
தூரத்து இருக்கைப் பெண்

“கள்ளொற்றி கண்சாய்பவர்”
குறளின் கீழ்
குடி போதையில்
குறட்டை விடும்
குடி காரன்

ஹல்வா
பூ
பிஸ்கட் என
சேர்ந்து இருப்பார்க்கோ
சேருமிடத்து இருப்பார்க்கோ
சேர்க்கப்படும் பொருட்கள்

வண்டிச் சக்கரத்தின் சுழலில்
வழித் தடத்தில் நசுங்கி
வாழ்க்கையை நோகும்
கண் திருஷ்டி பூசணிகள்

மாநகர எல்லையில்
மோவாயில் விரல் பதித்து
நாசூக்காய் கும்பிடப்படும்
காவல் தேவதைகள்

நில்லாத் தடங்களில்
அவ்வப் போது
அசைக்கப்படும்
”கோலா” கட்டை விரல்கள்

தெருவில் கதிர் பரப்பி
நவீனப் போரடிக்கும்
விவசாயக் கும்பல்கள்

சொர்க்கம் அழைக்கிறது எனும்
சுவிசேட கூட்டங்கள்

ஊர்தி நிற்கும்
உணவு இடைவேளையில்
சாப்பாட்டுக்கு கூட்டம் சேர்க்கும்
சிபாரிசாளன்

அரசும் அவனியும்
அல்லும் மறந்தும்
கருமமே கண்ணாய்
கடை விரித்திருக்கும்
கை வினைப்பொருள்
கலைஞன்

வண்டி வந்தாச்சுடே! என
கடிகாரத்தின் மணி மாற்றும்
கடை முதலாளி

வண்டி புறப்பட்டதும்
வாராமப் போறானே என
தோரணையாய் முறைக்கும்
தேயிலை கடைக்காரன்

எவரோடும் பேசலாமா
ஏதேனும் படிக்கலாமா எனும்
நாள்பட்ட போராட்டம்

தோழா! வெற்றி உமதே! என
தோள் தட்டும்
சமீபமாய் கண் விழித்த
பின் இருக்கை
பொக்கைக் குழந்தை

இடம் சேர்ந்தாச்சா என
இடம் தெரியாது
இடைவிடாது
சினந்து விசாரித்து
சிணுங்கும் கைபேசி

வழிப் பயணமும்
வாழ்க்கையும்

ஒத்துத் தான் இருக்கின்றன
ஒன்றுக்கு ஒன்று
ஒன்றைத் தவிர

முடிவு !



Tuesday, October 09, 2012

குளிர்

முயன்று பெறா சுதந்திரத்தை
முழக்கும்
முடக்கப்பட்டிருந்த ரஜாய்..

ஓராண்டு ஓய்வினின்று
ஓதத்தின் ஈரம்
காட்டும் சுவர்கள்
மூட மறுக்கும் கதவுகள்..

சூட்டிற்கு வீட்டிற்குள்
காலுறையுள்
கால் நுழைக்கும்
பாதங்கள்…

தங்கு தடையின்றி
தடுக்கிடும் இடங்களிலெல்லாம்
தவளைகள்…

சோம்பலோடு
வெந்நீருக்கு
வெளி வரும்
வெங்கலப் பானைகள்…

சன்னமாக
மக்கியதன் சின்னமாக
பற்ற வைக்காமலே
புகை கக்கும்
விறகுக் கட்டைகள்…

எரியலாமா எனும்
எண்ணத்தோடு
எங்கோ தூரத்தில்
எழும் தீ சுவாலை..

”அகலாது அணுகாது”
கையை நம்பியாராய் தேய்த்து
கட்சிக் கும்பல் போல்
அதைச் சுற்றியும் ஒரு
அவசரக் கூட்டம்..

காய்ச்சிக் குடிக்க
கருப்பட்டியும்
காய்ச்சலுக்கு உதவும்
காயங்களும்
தைல மர
தைலமும்
சரும வறட்சி
சர்வ நிவாரணிகளும்
வருகைப் பதிவை பதித்த
வாங்க வேண்டிய பட்டியல்..

மடித்து விடப்பட்ட
முழுக்கை சட்டைகளில்
நேர் செய்யப்படும்
கைப் பொத்தான்கள்

சாயா
பாயா கடைகளில்
”கோலா” இளைஞர்கள்..

மஞ்சள் பூசணிக்கு
மடல் வரைந்து
வேலை முடிந்ததென
விடை பெறும்
தர்பூசணி கொடிகள்…

தைலக் காப்பிற்கு
தயார் ஆகும்
தகத்தகாயமான தெய்வங்கள்…

மார்கழிக் கோலங்களை
மனனம் செய்யும்
மாதரசிகள்…

தோரணமாய்
துணி காய
மின் விசிறியின் கீழ்
மிளிரும் புதுக் கொடிகள்..

திரும்பவும் திருப்பப்படும்
திருப்பாவை புத்தகங்கள்…

தளிர் காலம் தேடி
தவிக்கும் தாவரங்கள்

டில்லியின் வெட்பநிலை
தினம் பார்க்கும்
வடக்கில் மகன்
வாழும் வீடுகள்

”சீசனை” நினைந்து
தொண்டையை செருமும்
பாடகர்கள்

ரயில் ஓடத் தொடங்கியதும்
ரகசியமின்றியே மூடப்படும்
ஜன்னல்கள்…

மொத்தத்தில்..
ஊரெங்கும் நடுக்கம் !!
குளிரின் தொடக்கம் !!