Wednesday, January 28, 2009

அந்த 14 நொடிகள் . . . . .

நாள் இரண்டு முன்னம்
நடந்தது ஒரு சம்பவம் !!
அதனின்று தப்பித்தது
அடியேன் செய்த
அருந்தவம் !!

எழுதும் எனக்கு
இன்னமும் உதறுகிறது !!
நடந்ததை நினைக்க நினைக்க
நெஞ்சம் பதறுகிறது !!

கடல் வானில் அன்று
கரும் மேகம் !!
சாலையில் விரையும் வண்டியில்
120 கிமீ வேகம் !!

வலப் பக்க இருக்கையில்
வலக் கரம் பற்றியவள்
வழக்கொழிந்த கதை பேசியவாறு !!
பின் பக்கம் எனது
பிழையறியா பிஞ்சுகள்
Lilo & Stitch பார்த்தவாறு !!

நெரிசலில்லை சாலையில் !!
முனைந்தேன் நான்
முழு மூச்சாக வேலையில் !!

திடுமென வண்டியில்
திகைக்க வைக்கும் உதறல் !!
என்னவோ ஏதோவென
எல்லோரும் கதறல் !!

அதற்குள் வண்டி
அங்கும் இங்கும்
அலை பாய....
என்னவோ ஏதோவென்று
எல்லோரது எண்ணமும் மேய......

திருப்பும் விசை
திருப்பிய வழியில் திரும்பாது
திடுமென செயலிழக்க...
வண்டியை நிறுத்துவோம் எனும்
வடிவான என் எண்ணம்
வலுவிழக்க.....

நெற்றி நரம்பு புடைக்க..
நெஞ்சுக் குழியில் காற்று அடைக்க..

அவச நிலையில்
அனைவரது கண்ணும் விரிய...
அரங்கன் அல்லா என
அனைத்து தெய்வமும்
அடியேன் கண்ணில்
அதி விரைவாய் தெரிய..

நடப்பதும் அறியாது.....
நடக்கவிருப்பதும் தெரியாது...

ஒருவாறு வண்டியை
ஓரங் கட்டி...
விதியைத் திட்டி....

வண்டியினின்று இறங்கி
வலப் பக்கம் பார்த்தால்
பின்னம் பக்கத்தினின்று
பிய்ந்து பறந்திருக்கிறது
புத்தம் புதிய டயர் !!
Michellin அதன் பெயர் !!

உதவிக்கு AAA யை அழைத்து....
உபரியாக இருந்த
உதிரி டயரால் பிழைத்து....

வாடிய முகத்தோடு
வீடு வந்து சேர்ந்தோம் !!
நடந்ததை நினைந்தே
நாளெல்லாம் சோர்ந்தோம் !!

அன்று
அச் சம்பவம்
அவ் வேளையில்
அவ்விடத்தில்
அரங்கேறிய பிறகு
அடியேனுக்கு நடந்த
அனைத்தையும்
அறிவியலால் ஆய இயலும் !!
அது எதனால்
அரங்கேற்றப்பட்டது என்பதற்கு
அறிவியலில் உண்டோ பதிலும் ?!

நண்பர்களே !!
அவ்விதத்தில் எனக்கு நடந்ததும்
அனேகமாக ஒரு Big Bang !!
அல்லும் அது
அறிவியலைக் கொட்டும் Fang !!

பிரபஞ்சம் பிறந்தது அதனால்..
பிறப்பித்தது எதனால் ?
என...

அந் நிகழ்வின்
ஆதார காரணம்
அறிவியலில் இல்லை !!
விரியும் பிரபஞ்சம் என
விரிவுரையாற்றுவோரும்
விரைவில் காட்டுவார் பல்லை !!

மஞ்சள் துண்டு
பகுத்தறிவு என
அனைவரிடம் இன்று காண்கிறேன்
அழகாய்ப் பேசும் யுக்தி !!
அதற்கு அப்பாற்பட்டது
அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஓர்
சக்தி !!

எவரையும் இடிக்காது
எவ்வெலும்பையும் பொடிக்காது

அந்த 14 நொடியுள்
அச் சக்தியை நான்
அருகில் கண்டேன் !!
“நமக்கும் மேலே ஒருவனடா” எனும்
நாட்பட்ட வாக்கை
நினைத்துக் கொண்டேன் !!

Labels: , , , , ,

Monday, January 12, 2009

சத்தியமே லட்சியமாய். . .

ramalinga-raju

நிறுவனம் ஒன்றின்
நிதி நிலையை
நிதர்சனமாய் அறிய....
நிர்வகிப்பாரது
நிர்வாகத் திறன்
நிலத்தார்க்கு தெரிய....

பங்குதாரர்களும்
பங்கீட்டாளர்களும்

காலையில் எழுந்தவுடன்
வாசலில் செய்தித்தாள் விழுந்தவுடன்

அதி விரைவாய் படிப்பர்
அக் குழுமத்தின்
அன்றாட கணக்கினை !!
அக்கு வேறு
ஆணி வேறாக
ஆராய்வர் பலர்
அதில் தெரியும் பிணக்கினை !!

தெள்ளத் தெளிவாய்
தெரிய வேண்டுமதில் நேர்மை !!
தொழுமாறு செய்ய வேண்டும்
தொழில் செய்வாரது கூர்மை !!

உள்ளவை உயர்ந்தவையா என
உற்று நோக்கும் உலகில்

உண்மை என்பது ஒருவன்
உத்தமனா உதவாக்கரையா என்று
உரசிப் பார்க்கும் உரைகல் !!
உளத்தில் அதனை
உட்கார்த்தாது
உள் நாக்கை மடித்து
உரக்கப் பேசிடில்
உன்னதமாகுமா உரைகள் ?

இந்தியாவை மேம்படுத்த...
இண்டு இடுக்குகள் எங்கும்
இரு கணினி பொருத்த....

இருக்கலாம்
இறவா எண்ணம் !!
இருப்பினும்
இருக்கும் நாள் வரை
இருக்க வேண்டும்
இவ்வுலகோர் நம்மை
மறவா வண்ணம் !!

பங்குச் சந்தையில்
பங்கு புகழ்க் கொடி நாட்ட....
இல்லாத பணத்தை
இருக்கின்றதென காட்ட.....

ஆட்டுவிக்கிறது நிதி !!
ஆடுகிறான் அதனால்
ஆளும் பிரதிநிதி !!

அமெரிக்காவில்
அன்று Enron !!
இராமலிங்க ராஜு
இன்று
இந்தியாவில் ”பின்றான்” !!

எழுதும் போதே
எனக்கு எங்கோ இடிக்கிறது !!
இனி உலகம்
இந்தியர் கையிலென
இயம்பியோர் இரு கண்ணும்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறது !!

மதி நிறைந்தோரே !
மறந்தீரே தங்களது பங்கை !!
உலகோர் வாங்குவாரா இனி
உன்னதமான தங்களது பங்கை ?!

சத்யம் எனும் குழுமத்தில்
சத்தியம் இல்லை !!
நயத்தகு உலகத்தார்
நம்புவரோ இனி
நம்மவரது சொல்லை ?!

Labels: , , ,

Monday, January 05, 2009

சங்கீதம் எனில்.... – 03

எழுபத்திரண்டு மேளகர்த்தாவாக..
எண்ணற்ற ராகங்களின்
காரண கர்த்தாவாக..

அகன்று பரந்த
அச் சமுத்திரத்தை குறுக்க..
பார்ப்பாரும் கேட்பாரும்
புரியுமளவு சுருக்க...

தேவைப்பட்டது ஒருவரின்
தேசுடைய பார்வை !!
துவங்கியது நம்மவரின்
துயரறு கார்வை !!

சிம்ம வாஹினியோ
ஜகன் மோஹினியோ

பிலஹரியோ
மலஹரியோ

பசந்த் பஹாரோ
பாக்யஸ்ரீயோ

நடபைரவியோ
நளினகாந்தியோ

சாதா தன்யாசியோ
சுத்ததன்யாசியோ

பாடலின் சாரம் தெரிய
தேவை பாவம் !!
அதன்றி பாட்டாகும்
அந்தோ பாவம் !!

பிறிதொருவர் பாடியதையே
பின்பற்றி பாடினும்
தேவை பாட்டில் வித்தியாசம் !
தெரியவேண்டும் அப்பியாசம் !!

தாரஸ்தாயி
மத்தியஸ்தாயி என
உருட்ட வேண்டும் குரலை
அனாயாசமாக !!
ஆயினும் கேட்பவர்
ஆகலாகாது ஆயாசமாக !!

மேல்தட்டு மக்களுக்கு ஆகாது
மேலோட்டமாகப் பாடும்
வஞ்சகம் !!
சாமானியன் எதிர்பார்ப்பதோ
சனரஞ்சகம் !!

இம்மியளவும் வீணாக்கலாகாது
இசை சபாக்களின் நேரத்தை...
இருந்தும்
இரண்டு மணி நேரத்துள்
இசையில் தர வேண்டும்
இன்னிசை சுருதிகளின் சாரத்தை !!

பல வாக்கேயக்காரரின்
பாட்டையும் தொடுத்து. . .
பக்க வாத்தியக்காரரையும்
பலமாய் தட்டிக் கொடுத்து. . .

எளிமையாய்..
எனினும் வலிமையாய்...

பாடல் அளித்து..
பார்ப்பார் களித்து..

இவ்விரு குழுவினரையும் வெல்ல..
இமயத்தை நோக்கிச் செல்ல...

தேவை கம்பீரம் !!
கச்சேரியை கணப்பொழுதில்
கைவசமாக்கும் வீரம் !!

--தொடரும்

Labels: , , , , ,