ராஜசேகரா. . . . .

இறப்பைச் சொல்லி
இறவா இகழுற்றது
இந்நாள் !!
இயல்பென ஏற்கமுடியவில்லை
இழப்பினை என்னால் !!
அழுகுரலில் விம்முகிறது
ஆந்திரப் பிரதேசம் !!
பிறந்தவர் இறப்பது
பிரபஞ்ச விதி என
பிதற்றித் தேற்றுகின்றது அவரை
பிற தேசம் !!
மறைந்த முதல்வர்
மறைந்த விதம்
மனதை உறுத்துகிறது !!
மாற்றான் என்னையும்
மாளாச் சோகம் வருத்துகிறது !!
அவரைக் கொண்டு செல்ல
அவசரத்தில் வந்த காலனும்
தரையிறங்கவில்லை !!
அதனாலோ என்னமோ
அவரது வானூர்தியும்
தரை இறங்கவில்லை !!
”அடித்தளத்தில் இருப்பவனும்
அனுபவிக்க வேண்டும் வளர்ச்சியை !
அனுதினம் உலகு
அவன் முகத்திலும் காணட்டும்
அலர்ந்த தாமரையின் மலர்ச்சியை !!”
அகால மரணத்தால்
அமரரான முதல்வர்
அவ்வாறு சொல்லி
அன்று பிடித்தார் ஆட்சி !!
அது அமையின்
அவனி உணரும்
அன்பர் அவரது
அரசியல் மாட்சி !!
உலகு அறிய வேண்டும்
உன்னதமான இரு நீதி !!
முக்கியமாய் அரசியல்வாதி !!
குணம் ஒதுக்கி
பணம் பதுக்கி
தம் வளர்ச்சிக்கே
தனித்து பாடுபட்டு..
தீய வழியில் ஈடுபட்டு..
நாட்டை முன்னேற்ற நினையாது
நாளும் முனையாது
எல்லாம் எமதே என
காலை ஆட்டுகின்றீர் !
என்றோ ஒரு நாள்
காலை நீட்டுகின்றீர் !!
அந்தகன் உம்மை
அழைத்த வழியில்
அநீதி இருப்பின்
”எதிரிக்கும் இவ்வழியில்
எமன் வர வேண்டாமென”
உம்மால் உடல் தளர்ந்தவனும்
உகுக்கிறான் கண்ணில் நீர் !!
அத்தகைய நல்லவனை
அற வழியில்
ஆளளாமே நீர் ?
எனக்கும் ரெட்டிக்கும்
எவ்வொரு தொடர்பில்லை !!
எனினும்
எண்ணொணா சோகத்தில்
எதையேனும் சொல்லி
என்னைத் தேற்றவே
என் நா எழவில்லை !!
மானுடமே !!
நிலையாமை என்பது
நிதம் நாம்
நினைய வேண்டிய ஒன்று !!
இருப்பவர் யாவரும்
இருக்கும் யாவையும்
இருக்கும் யாம்
இருக்கும் வரை !
இவ் வையம்
இவ்வாறன்றோ வாழ்கிறது
இதுவரை ?!
இதுகாறும் கண்டிருக்கிறோமா
இவ்வாறு நினையா ஒருவரை?
உயிரற்று உடல்
உறங்கும் நாள்
உடன் இறங்குகின்றோம் ஆறடியில் !!
அழகுறச் சொல்லுகிறான்
அதனை ஒருவன் ஈரடியில் !!
மூவிரல் உயர்த்தியவன்
மூதுரையில் சொல்கிறான்
“நெருநல் உளனொருவன் இன்றில்லை” !
அதனை மீறும் சொல்
அவனியில் ஒன்றில்லை !!
Labels: tiruvalluvar, uncertain life, YSR passes away

