Friday, January 08, 2010

இருபது வருடங்கள். . . – 6




கேட்டறியாப் பாடல் பாடி
கேட்பவர் தரத்தை
கேள்வியின்றி உயர்த்தும் நேயமும்...

தலையெடுக்கும் தலைமுறைக்கு
தம்மால் இயன்ற உபாயமும்..

அடுத்த இரு படி !!
அதற்குத் தேவை

உருப்படியான
உருப்படி !!

அவ்விரண்டு படி உங்கட்கு
அறவே தடுக்கிறது !!
அது எங்கட்கு
அதிக துயர் கொடுக்கிறது !!

சண்முகப்ரியாவில் நீவிர்
”சரவண பவ” என்றதும்
சரவண பவன் என்கிறது
சமீப நாளாய்
சங்கீத அவை !!

அரைத்ததையே அரைக்கிறாளென
அவ்வளவு அவசரத்தில்
அனுதினம் அவை !!

கச்சேரியின் கால அளவும்
கச்சிதமாய் குறைய....
மக்கள் எதிர்பார்க்கின்றார்
முன்னுக்கு இப்போது நிறைய !!

இருக்கும் நேரம்
இரண்டு மணிக் கூறுகள் !!
புத்துணர்ச்சிக்கு மக்கள்
புதிதாய் எதிர்பார்க்கின்றார்
புதுமையின் சாத்தியக்கூறுகள் !!

நைச்சியமாய் லலிதாவில்
”நன்னு ப்ரோவு” என்றதும்
நமக்கேன் நோவு? என
நம் மக்கள் நழுவுகின்றார் !!
போதும் என
போதும் கையைக் கழுவுகின்றார் !!

“வாதாபி” என்றவுடன்
வாதாபியில் வென்ற

நரசிம்மவர்மன் கணக்காய்
நம்மவர் உறுமுகின்றார் !!
கோபத்தில் செருமுகின்றார் !!

” ஹம்ஸநாதம்
ஹம்ஸாநந்தி
பலஹம்ஸ

பலவாறு இருக்கிறது
பல ஹம்சம் !!
பாடலாமே அதனில்
பயனுள்ள
பல அம்சம் ?!

அடிக்கொரு தரம்
அன்று முதலாய் கேட்ட
ஹம்சத்வனி
தேவையா இனி ? “

குற்றச்சாட்டு வருகிறது
குறைவின்றி !!
வெளியேறுகிறார் மக்கள்
நிறைவின்றி !!

சிம்மேந்திர மத்யமத்தில்
சிரமமின்றி முருகன்

”ஒரு பதம் வைத்து
மறு பதம் தூக்கி நின்றாட”...

மறந்து கூட
மறுபடியும் வேண்டாம் என
மக்கள் கிடந்து மன்றாட...

சித்தம் வேகின்றது !!
நித்தம் போகின்றது !!

எமக்குத் தெரிந்தது
எதற்கு? என
எடுத்த க்ருதிகளுக்கெல்லாம்
எல்லா தரப்பினரும்
எதிர்ப்பைத் தெரிவிப்பது

எதிர்பார்ப்பில்
எதிர் பார்ப்பார் குற்றமா ?
எதிர் பாடுவார் குற்றமா?

சிக்கி இக் கேள்வியில்
சிக்கல் வந்த
“சிக்கல்” வேலாய்
சிறியேன் நான் வியர்த்திட.....

உவந்து கேட்கிறேன்
உடனே உங்களது
உன்னத தரத்தை உயர்த்திட !!

Labels: , , , , , ,