Friday, November 06, 2009

சிக்குன் குனியா. . . .- இறுதியாக




3)

கலைஞர்க்கும்
கலைஞானிக்கும்
கவிப் பேரரசுக்கும்
கவிதாயினிகளுக்கும்

மேலுக்கு சுகமில்லை எனில்
மேதினியில் மருத்துவர்

மாடி ஏறி வருவார்
மாளிகை வீட்டுக்கு !!
தினத் தந்தியில்
தினம் செய்தி வரும் நாட்டுக்கு !!

ஆங்கவர் அறிவரோ
ஆதரவற்றோர்
ஆயிரம் இருக்கிறார்

வறுமைக் கோட்டுக்கு கீழ் !!
கிஞ்சித்தும் அவர்கட்கு
கிடைப்பதில்லை கூழ் !!

சிக்குன் குனியா தந்த
சித்திரவதையில்

தன் இயல்பிழந்து
தவிக்கும் பெரும்பாலானோர்
கீழ்த்தட்டு மக்கள் !!
தரமான வாழ்க்கை என்பது
அவர்கள் மறந்த சொற்கள் !!

பால் ஊற்றுபவர்
பாட்டுக்கு நாயனம் ஊதுபவர்

நாளேடு போடுபவர்
நாவிதர்

கிணறு எடுப்பவர்
கட்டுமான வேலை செய்பவர்

இவர்களின் நிலையென்ன ?
இந்நோய்க்கு
இவர்கள் தந்த விலையென்ன ?

எக்குத்தப்பாய் இந்நோய் வரின்
என்னணம் துடுப்பு போடுவார்

அலை கடலில்
அன்றாடம் மீன் பிடிக்கும்
வலைஞர் ?!
அவர்க்கு என் செய்தார்
தனக்குத் தானே பட்டமளித்து
தனித்து பரிமளிக்கும் கலைஞர் ?!

இரண்டு ரூபாய் அரிசியும்
இலவச தொலைக்காட்சி பெட்டியும்

இவர்களின் தேவையா ?
இதைத் தருவது சேவையா ?

அடிப்படை சுகாதார வசதி
அறவே அற்ற
அதே தமிழ் நாட்டில் தான்

அரசு பொது மருத்துவமனை
அப்போலோ
மலர்
பில்ராத்
செட்டிநாடு

என
விண்ணை முட்டி நிற்கும்
வியத்தகு மருத்துவ நிலையங்கள்

”குப்பை நடுவே
கொஞ்சும் குருக்கத்தி”யாக

மார் தட்டுகின்றன !!
ஆயினும் கேட்கிறேன்
அவர்களின் சேவை
ஆரை எட்டுகின்றன ??

உருப்படியில்லை எனினும்
உடனுக்குடன் காண

ஊருக்குள் ஒரு மருத்துவரை
ஊரார் தேடுகின்றார் !!
உற்றவர் கற்றவரில்லையெனில்
உள்ளம் உடல் வாடுகின்றார் !!

பெருங்களத்தூரில் இருக்கும்
பெயர் பெற்ற மருத்துவர்

பெயர் தெரியா நிறுவனத்தாரது
பெரிய பெரிய பில்லைகளை
பெரிதும் பரிந்துரைக்கின்றார் !!

ஆண்டிபயாட்டிக்
ஆம்பிசிலின் என
அன்று முதல் இன்று வரை
அரைத்த மாவையே
அரைக்கின்றார் !

நோய் நாடவோ
நோய் முதல் தேடவோ

அரசு ஆவணங்கள்
ஆணைகள்
ஆரம்ப சுகாதார மருத்துவரை
அணுவளவும் ஏன் எட்டவில்லை ?

தமிழக சுகாதாரத் துறை
தலைவரை
தமிழக முதல்வர்

தகவல்களை பரப்ப
தவிடளவும் ஏன் சுட்டவில்லை ??

தட்டிக் கேட்கும்
தார்மீகப் பொறுப்பிலிருப்பவரை
தட்டிக் கேட்டால்

”கொசுவுக்கு பயந்து
கோட்டையா விட முடியும்”

என
வரலாம் பதில் சிலேடையாக !!
வாதிடுவார் அவர்
வாரித் தந்த பெருமைகளை

உயிரினும் மேலான
உடன்பிறப்புகளே என
மேடை மேடையாக !!

சாலையில்லாமல் வாழலாம்
சேலையில்லாமல் வாழலாம்
வேலையில்லாமல் வாழலாம்

நாளையில்லாமல் என்னணம்
நாம் வாழ இயலும் ?

என்று நம் நாடு
"எல்லோரும் இன்புற்றிருக்க" முயலும் !!

வாசுகி மணாளன்
வார்த்தை வைக்கிறான்...

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

அது வரை நம் பாடு
அந்தோ பெரும் பாடு !!

-- முற்றும்

Labels: , , , , ,