Wednesday, June 30, 2010

ஆடலரசன்...ஆர்க்கெஸ்ட்ராவில்..




மாணிக்கவாசகம்
மாந்தர்க்கு அருளிய
மாசில்லா வாசகம்
திருவாசகம் !!

தனித்துவமிக்க அதனை
தனித்து உணர

தமிழ் அறிவன்றி
தவிடளவும் தேவையில்லை
தனியொரு யாசகம் !!

அதுவைதத்தின் ஆதியை..
அடி முடி
அற்ற சோதியை...

பண்ணைபுரம் தந்திருக்கிறது
பரங்கியர் வாத்திய சுரத்தில் !!
”ஆரடோரியோ”வாக நம் கரத்தில் !!

”நமச்சிவாய வாழ்க” என
நமது எழுத்தோடு
இசைஞானி பறந்தார்
இங்கேறி !!
இறங்கினார் ஹங்கேரி !!

ஆர்க்கெஸ்ட்ரா குழுவினரோடு
அங்கேறி...
அக மகிழ்ந்து
அவையோர்க்கு முகமன் கூறி ...

சந்திர சூடனை
சுடலை நாடனை

பண் தொடுத்து
பனுவல் பனுவலாக
இளையராஜா விரவ..
“தேமதுரத் தமிழோசை
உலகமெலாம்” பரவ...

இமைக்கும் நேரத்தில் நம்
இரு காதுகளுள்
இன்ப மயமான
இசை வெள்ளம் !!
உருகத் தொடங்குகிறது
உறங்கிக் கிடக்கும் உள்ளம் !!

அறுகின்றோம் பந்தம் !
உறுகின்றோம் ஆனந்தம் !!

குறையொன்றுண்டு கைவசம் !
குந்துமணியாயினும் அது நிசம் !!

பாடப் பட்டவன்
பரம்பொருளெனினும்

நமக்கு அவன்
நம்மூர் சிவன் !!

உறையுமிடம் அவனுக்கு
உடல் எரிக்கும் மயானம் !
கயிலைநாதனை பாட எதற்கு
கடல் கடந்த பிரயாணம் ?

உமாமகேசனின் நாதம்
உடுக்கைச் சத்தம் !!
அவனைப் பாட
அங்கெதற்கு
அக்கார்டியனோடு யுத்தம் ?

பஞ்ச பூதமாக
பரவி நிற்கின்றான் அவன்
பழந்தமிழர் நிலத்தில் !
ஆராய வேண்டுமா அவனை
ஆங்காங்கே தலை காட்டும்
ஆங்கிலத்தில் ?

நம் கருவியின் துணையோடு
நம் நாட்டார் இணையோடு
நம் நாதத்தின் இசையோடு

இசைத்தட்டு
இன்னொன்றில்

செய்ய வேண்டும் இசைஞானி
செயற்கரிய செயல் !!
தழைக்க வேண்டும்
தமிழர்தம் இசை வயல் !!

Labels: , , , ,

Friday, January 29, 2010

ஆரோ. . . .



மறதி எனும் Alzheimer’s (Black)
மாற்றான் தாய் எனும்
Surrogate motherhood (Filhaal)

எழுத்துக்களின் உருமாற்றம்
எனும் Dyslexia (Taare zameen par)
AIDS awareness (Phir Milenge)

மதம் சார்ந்த
Communal problems (Firaaq)
மனிதம் சார்ந்த
Common man’s justice (A Wednesday)

அவ் வரிசையில் இன்று
Progeria (Paa) !!
அதன் பெருமை
அப்பப்பா !!

தனித் திறமையோடும்
தமிழ் நாட்டின் ”துணை”யோடும்

தந்திருக்கிறது இதனை
இந்தித் திரை !!
படத்திற்கு படம்
புதிதாய் தேடுகிறது இரை !!

எடுக்கலாம் என பலரால்
எண்ணிட முடியாததை
எண்ணித் துணிந்து.....

எதிர்ப்பையும்
எதிர் பார்ப்பையும்
சரி சமமாய்
சமாளிக்கலாமென துணிந்து...

சித்திரமாய் வடக்கு எடுத்து
சிரமமின்றி ஏறுகிறது புகழுச்சியில்
சர்ரென்று !!
நாம் கிடக்கிறோம்
“என் உச்சி மண்டையில் சுர்” என்று !!

மரபணுக்களின் மாற்றத்தால்
வயதுக்கு வராமலேயே
வயது வந்து...

இளமை
இளமையிலேயே அணியும்
முதுமைச் சட்டை ”ப்ரோஜேரியா” !!

அதனால் வரும்
அளப்பரிய சிக்கல்களை
அன்றாட அல்லல்களை
அனேக அவலங்களை

விளக்கவில்லை படத்தில்
விலாவாரியா !!

வந்த வியாதியை நினைந்து
வசமிழந்து வாடாது....
வசனங்களில் துக்கங்களை
வரையின்றிப் பாடாது...
சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை
சகட்டு மேனிக்கு சாடாது...

குழந்தைத் தனமும்
குதூகலமும் சேர்த்து ...
குறுக்கே பல
குறுஞ்செய்திகளை கோர்த்து...

அற்புதமாய் படைத்திருக்கிறார் !!
தழுவி எடுக்கப்பட்டது எனும்
தர்க்கம் தந்த அழுக்கை
தங்கு தடையின்றி துடைத்திருக்கிறார் !!

இரவலாய் வாழும்
இப் பூமியுள்

இருக்கும் நாள் வரை
இருப்போம் இன்பமாய்
இதுவாவது இருக்கிறதே எனும்
பாக்கியத்தோடு !!

இனி வரும் நாள்
இனிக்கும் எனும்
இசைமிகு வைராக்கியத்தோடு !!

என வாழ்கிறான்(ர்) ”ஆரோ” !!
எண்ணித் தவிக்கிறேன் நான்
தமிழில் இவ்வாறு
தன் நடிப்பால்
தனித்து மிளிரப்போவது ஆரோ ??

தன்னோடு முன்னாளில்
தன் மகளாய் நடித்தாரை

தற்காலத்தில்
தனது கதாநாயகியாக்கி
தனி “டூயட்” பாடுமளவே
தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது !!

திட்டித் திட்டியே தமியேனின்
திருமேனியும் நாடியும்
தினம் தளர்ந்திருக்கிறது !!

வடக்கில் பலர் ஏற்கின்றார்
வயதுக்கு ஏற்ற பாத்திரங்களை !!
நம்மவரில் ஒருவர்
நலங் கெட்டு கொண்டாடுகிறார்
ஐம்பது ஆண்டு சாதனையின்
பிரவர கோத்திரங்களை !!

”ஒரு கூடை சன்லைட் “
ஒரு மூடை ஃபைட்

“எங்கேலாம் உன்னேப்போல
துச்சாதனன் இருக்கானோ
அங்கேலாம் என்னேப் போல
கிஷ்ணனும் இருப்பான்டா”
எனும் “பஞ்ச் டயலாக்” என

கிடக்கிறார் ஒருவர்
கிடைத்த வரை ஆதாயமென
வெட்கம் செத்து !!
அடங்கவில்லை அவரது
அந்தக் கால பித்து !!

நம் பாணியிலிருந்து
நாம் மாறினால்
நமது சமூகம்
நம்மை ஏற்காதெனும்
நொண்டிச் சாக்கு

தரங் கெட்ட
தமிழ்த் திரையின்
நெடு நாள் சீக்கு !!

கட்டிய புடவையில்
கண்ணியமாய்
கவர்ச்சி எனும்
கவலையின்றி

பெற்றது
பெற்ற வியாதியால்
பெற்றவளாய் தான்
பெற்ற பொறுப்பையும்…
பெறச் செய்தவன் மீது
பெரும் வெறுப்பையும்…

காட்சிக்கு காட்சி காட்டி
தரத்தை நிலை நாட்டி

கண்ணையும் கருத்தையும்
கவர்கின்றார் வித்யா பாலன்
நடிப்பா நிசமா என
நம்ப முடியாது !!

எடை உடை
தணிக்கைக் குழுவின் தடை

என எதற்கும்
எள்ளளவும் கவலைப்படாது...
படம் விடாது...

துகிலுரிந்தால் ஒழிய
துயிலெழாது கூட்டம் என

இன்றைய தமிழ்
இடுப்பழகிகளும்...
இளம் தமிழ்
இயக்குனர்களும்..

நினையும் வரை
நமக்கு விடியாது !!

”காயப் பட்டவரினும்
காயப் படுத்தியவர்
அடையும் பாடு கொடிது !!
அதன் துயர் நெடிது !! “

அழகான வசனம் வரும்
அந்த அந்திக் காட்சியில்

ஓரிரு வார்த்தை
ஒருங்கே பேச முடியா
ஓய்ந்த நிலையில்

ஓர விழியால்
ஒரு முறுவல் காட்டி

அன்னையை பார்ப்பார்
அமிதாப் !!
அக் காட்சி
அடிகோலும் செய்தி
அதி “டாப்” !!

இந்தியில் புத்தகத்துக்கு ”கிதாப்” !!
இந்தியாவில் நடிப்புக்கு அமிதாப் !!

Labels: , , , , , , , , , ,