சீரலைவாய் சிவகுமரன்...

ஒரு பழத்திற்காக
உலகம் சுற்றியவன் !!
இடம் வலமென
இரு பெண்டிரை
கரம் பற்றியவன் !!
செந்தில்
செந்தூரன்
சண்முகன்
சிவ குமரன்
கந்தன்
கடம்பன்
கதிர்வேலன்
குகன்
முருகன்
முத்துக்குமரன் என
பல பேரன் !!
தக்கன் பேரன் !!
தமிழ்க் கடவுள் என
போற்றப்படுபவன் !!
திருமுருகாற்றுப்படையில்
ஏற்றப்படுபவன் !!
விரைந்தேன் அவனைப் பார்க்க !!
விழைந்தேன் பழங்குறை தீர்க்க !!
போன இடம் சீரலைவாய் !!
போகவில்லை அவ்வூர்
சுனாமி எனும் பேரலைவாய் !!
ஆதி நாளில்
ஆண்டியாய் திரிந்தவன் !!
அத்தலத்தில் சூரனுடன்
அறப்போர் புரிந்தவன் !!
திருநெல்வேலியினின்று
திருச்செந்தூர் வழியில்
வண்டி விரைந்தது !!
கண் நிறைந்தது !!
ஆம்...
தாமிரபரணி விழுகிறது
தானாய் விழியில் !!
தடுக்கி விழ சாலையில்
குழி இல் !!
பொருநை எனப்
பெயர் பெற்ற
“பார்த்தாலே பாபமறும்”
புண்ணிய நதி !!
அதன் கரையெங்கும்
திருப்பதி !!
ஆம்.....
திருக்குருகூர்
திருப்புளிங்குடி
திருப்பேரை
திருக்கோளூர்
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருத்தொலைவில்லிமங்கலம்
என...
அழகழகாய்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நவ திருப்பதி கோயில்கள் !!
நான்கு திக்கும்
கோபுர வாயில்கள் !!
செந்தூர் எல்லை நுழைந்து
மேல் அங்கி களைந்து
கடலில் கால் நனைத்து
“கந்தா” என நினைத்து
கோயிலில் கால் வைத்தேன் !!
தலையில் கை வைத்தேன் !!
கர்ப்பக்கிரகத்துள்
கடமை மறந்து
காசுக்காக காத்திருக்கும்
கணக்கற்ற தலை !!
நோக்குகின்றார்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வசதி படைத்தார் வருதலை !!
ஓராறு முகனின்
ஒரு பெயரும்
ஒரு மந்திரமும்
காதில் விழுவதில்லை !!
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்த சஷ்டி கவசமென
ஒன்றைச் சொல்லியாவது
ஒருவரும் தொழுவதில்லை !!
மாசில்லா கோவிலினும்
காசில்லா கோவில் மேல் !!
காக்கட்டும் அவர்களையும்
கந்தனின் வேல் !!
கற்பூரம் ஒற்றி ..
கர்ப்பக்கிருகம் சுற்றி...
புராதன சிற்பங்கள் கண்டு....
பிரசாதம் உண்டு...
களையிழந்திருந்தது என் சேனை !
களிப்பூட்டியது அவரை யானை !!


மனமின்றி விடைபெற்றேன் கந்தனிடம் !!
மனதை பறிகொடுத்தேன் மொந்தனிடம் !!

பொருநையில் வைத்தேன் காலை !
எதிரே அடர்ந்த வாழைச்சோலை !!

நெல்லை வந்து களைப்பாறி
பிள்ளைகட்கு தலைவாரி
சென்றேன் அத்தை இல்லம் !!
ஆயினர் என் பிள்ளைகள்
அவளுக்கு செல்லம் !!


அதிக நேரம் ஆனதால்
”அல்வாவை” விடுத்து
அவசர கதியில்
வண்டிச் சத்தம் கொடுத்து...
ஏறினேன் புகைவண்டியுள்
குடும்பத்தோடு கை கோர்த்து...
வண்டி புறப்பட்டது
அடையப்போகும் ஊர் பார்த்து...
அவ்வூர் ?
அழகன் பெண் கொடுத்த ஊர்..
அம்பலத்தான் பெண் எடுத்த ஊர்..
ஊரெங்கும் பெண் ஆட்சி !!
பெயர் மீனாட்சி !!
Labels: nellai, porunai, seeralaivai, Tamiraparani, tiruchendur, Tsunami
