Wednesday, April 21, 2010

நாக் கோடாமை. . .

வகுத்துரைக்க இருப்பதை
வழக்குத் தமிழில் சொல்வதெனில்
”சப்பை மேட்டர்” !!

இன்னிசைத் தமிழில்
இயற்றுக கவிதையாய்
இன்றே இதனை என
இருவர் எனைக் கேட்டர் !!

அருந் தமிழில்
ஆழங்கால் பதிக்க இருக்கும்

கவிதையின்
கருப் பொருட்களது

ஆதாரம் நீர் !!
நீர் என அதனை
நீங்கலாய் பார்க்கலாகாது
நீர் !!

தரத்தில் தனது பொருள்
தரணியை ஆளுமெனில்
தயாரிப்பாளர் பலர்
தருவார் ஆயுட்கால உத்தரவாதம் !!

உத்தரவாதத்திற்கு
உட்பட்ட காலத்தில்
உதவாமல் ஒரு பொருள்
உட்கார்ந்து விட்டால்

உபயோகப்படுத்துபவனுக்கு
உள்ளிறங்குமோ சாதம் ?

ஒற்றை ரூபாயாயினும்
கற்றை ரூபாயாயினும்

பாடுபட்டு உழைத்த பணம்
பாழாக விடுமா மனம் ?
நடந்தது எனக்கது
நேற்றைய தினம் !!

1)
தங்க மீன் நீந்தும்
தண்ணீர்த் தொட்டியின்
தட்ப வெட்பத்தை
தனது தண்ணீர் உபகரணத்தால்

இறக்கி ஏற்றி
இமைப்பொழுதும் மாற்றி

சமச் சீராக வைப்பதில்
சமர்த்தர்


Aqueon நிறுவனத்தார் !!
அவரது பொருளை வாங்குவோர்
அவற்றின் இயக்கம் சரியில்லையென
அணுவளவும் அனத்தார் !!

நீள நெடுக
நீண்ட நேரம்
நீந்தி விளையாடும் மீன்கள்
நீரினில் ஒருநாள்

இருந்தன சோர்ந்து !
இமாலய நடுக்கம் சேர்ந்து !!

மங்கலாய் இருந்தன மச்சம் !!
மண்டிக் கிடந்தது கண்ணில் அச்சம் !

சீதோஷணத்தை சமமாய்
சீராக்கும் கருவியன்றி

தவறாகவும் பிறிதொன்றில் தப்பில்லை !!
தவிடளவும்
தண்ணீரில் கதகதப்பில்லை !!

தண்ணீர் வெந்நீராக
தண்ணீராய் செலவழித்த பணம்
தன் வழியில் போக

குய்யோ முய்யோ என
கூக்குரலிட்டு

கூப்பிட்டேன் நான் Aqueon னை !
”கூற்றுள்ளவரை உழைக்குமென
கூறினாயே ” என

என் புலம்பல்
எட்டியது வானை !!

”அன்பரே !
அமர்வீர் மெதுவாக !!
அடித்துச் சொல்கிறோம் -
அனேகர்க்கு இது
அமைவதில்லை பொதுவாக !!

எனினும் உணர்கிறோம் –
எங்கோ இருக்கிறது பிழை !!
இனி இது நடக்காது -
இருப்பின் எம்மை அழை !!

எல்லாவற்றினும் பெரிது
எமக்கு எமது சொல் !!

புத்தம் புதியதாக ஒன்றினை
விரைந்து அனுப்புகிறோம்
விலாசம் சொல் !! “

சீக்கிரமாய் வந்தது பதில்
வீடேறி !!
சீரானது மீன்களின் செதில்
சூடேறி !!

2)

அப் பொருளின் பயன்
அழகுத் தோட்டத்துள் !!
அதனை விவரிப்பதில்
அர்த்தம் இல்லை
அன்னை இயற்கையின்
அருமை அறியாக் கூட்டத்துள் !!

மனிதன் மறந்துவிட்டான் புல்லை !!
மதுவில் பார்த்துவிட்டான் ”ஃபுல்லை” !!

புனல் எங்கணும் வற்ற
புல் தரை பற்ற

தத்தளிக்கிறான் மனிதன்
தண்ணீர் பற்றாக்குறையில் !!
”நீரின்று அமையாது உலகு” என
நீள் செய்தியுண்டு
நமது தொன் மறையில் !!

பெய்தால் புல் !
பெய்யாக்கால் nil !!

எனப் பொருள் வர
எடுத்துரைக்கிறான் வள்ளுவன்

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது !!

அருகம் புல்லுக்கு ஒருவாறு
அத்துயர் போக்கும்



“Oscillating sprinkler” ன்
பங்கு இவ்வுலகில்
பன்மடங்கு பெரிது !!

திவலையாய் நீரை
திக்கு திக்காய் இறைக்கும்

அக் கருவி
அடியேன் அகத்தில்
அந்தோ! நேற்று உடைந்தது !!

கால மாற்றத்தால்
காலமான அக் கருவியால்
மனம் சலனம் அடைந்தது !!

கண் மறந்தது துஞ்சலை !!
எழுதினேன் மின் அஞ்சலை !!

” ஏழை எளியோர்
காக்கும் Melnor !
என்னுள் இன்று
எழுந்திருக்கிறது ஒரு போர் !!

ஆயுட்காலம் வரை வருமென
ஆறு வருடம் முன்
ஆவலாய் வாங்கியது
ஆரவாரமின்றி அடங்கி விட்டது !!

துரத்தித் துரத்தி எனக்கு
துர்சகுனம் தொடங்கி விட்டது !!

கனத்த மனம் வெதும்புகிறது !
கண்ணீர் ததும்புகிறது !!

வாக்குறுதி அன்றி
வாடிக்கையாளன் எனக்கு
வாரிக் கொடுத்த பணமோ
வாங்கிய இடமோ நினைவில்லை !!

நடந்தது என் தவறல்ல
நம்பு – அது மெய் !!
ஆகவே இன்றே
ஆவன செய் !! “

வரி இரண்டில்
வந்தது தீர்வு !!
தளர்ந்தது அதனால்
தாளொண்ணா சோர்வு !!

”இன்றே எடுத்து அனுப்புக
இரண்டொரு படங்களை !!
கையால் குறியிடுக
கருவி உடைந்த இடங்களை !!

அழகிய புதிய கருவியொன்று
அகம் தேடி வரும் !!
வியாகுலம் விலகி
விடிவைத் தரும் !! “

புகன்ற வழியில்
புத்தம் புதியதாய் ஒன்று
இல்லம் வந்தது நேற்று !!
நாற்றிலும் நாவிலும்
Melnor புகழ்க் காற்று !!

விளங்கும் நீதியென்ன ?
கவிதையின் சேதியென்ன ?

இந்தியா – அமெரிக்கா என
ஒப்பிட்டு நான்
ஒசியப் பேசப் போவதில்லை !!
அடித்துச் சொல்கிறேன்
அதனால் ஆவதில்லை !!

வாடிக்கையாளன் என்பவனது
வாக்கில் உண்மையிருக்குமெனில்

அகில தாபனம் அனைத்தும்
அவனை மதித்தல்
அத்தியாவசியம் !!
அதுவே தொழில் ரகசியம் !!

விளம்பரதாரர் அனைவரது தேவை
விற்பனைக்குப் பின் சேவை !!
முதற்கண் இதனை
முழுமையாய் உணர்ந்து
முன்னுதாரணமாய் இருக்கும்
முன்னோடி வர்த்தகங்கள் யாவை?

உற்பத்தி செய்பவனுக்கு
உபயோகப்படுத்துபவன் கருத்தன்றி
உயர்வு வருவதில்லை !!
உன்னதம் தருவதில்லை !!

இரண்டு பொருட்களுக்கும் தலா
இருபத்தைந்து என

அமெரிக்க டாலர் ஐம்பது
அவ்வளவு பெரிய தொகையல்ல !!
கொள்கை எனும் Principle
குணத்தில் சிறந்தார்க்கு
குன்றளவு பெரிது; மிகையல்ல !!

மீன் வளர்ப்பு பற்றி
நாளை ஒரு நண்பன்
நாவார பேசுங்கால்
நான் சிபாரிசு செய்யப் போவது
யாரை ?

வீடு வாங்குபவன்
வீட்டுத் தோட்டத்திற்கு
தண்ணீர் விடுவது பற்றி
தவமேற்கொண்டு பேசுங்கால்
தமியேன் பரிந்துரைக்கப் போவது
எதனை ?

ஒரு பொருளுக்கு
விளம்பரத்தை விட
விமர்சனம் தரும்
வியாபாரம் பெரிது !!

அனைவர்க்கும் வேண்டும்
அத்தகு மனப்பான்மை !!
அது அமையின்
அடையும் அவனி மேன்மை !!

Labels: , , , ,