Tuesday, July 01, 2008

நேரியர்.....Eco Warrior

”மரங்கள் வனமானால்
முகில்கள் மழையாகும் “
ஒன்றும் செய்யாது
ஒசியப் பேசுதல் பிழையாகும் !!

கட்டிலடங்காது
ககனம் அழிந்து...
கணமும் மாசினால்
காற்றின் சுத்தம் ஒழிந்து ..

அன்றாடம் வீரியம் குறைகிறது
அவனியோர் விடும் மூச்சில் !!
அக்கறை இல்லை
அது குறித்து
அரசியல்வாதியின் பேச்சில் !!

கையை நெஞ்சினில் வைத்து
காதில் பஞ்சினை வைத்து

உரக்கப் பேசியே நகர்த்துகின்றார்
உதவாத அரசியல் தேரை !
உயர்த்தவில்லை ஒரு கணமும்
உன்னதமான ஊரை !!

அரிசி வேகவும்
அவியல் ஆகவும்

மன்பதை வாழ்கிறது இன்னமும்
மரக் கிளை முறித்து !!
உணர்த்தவேண்டும் அவர்கட்கு
”உலக வெப்பம்” குறித்து !!

விருட்சங்கள் பற்பல
விழுகிறது அன்றாடம்
வெட்டுப் பட்டு !!
ஒரு சிலர்
ஒப்புக்காக இந்நிலையை
ஒழிக்க முனைகிறார்
ஒன்றிரண்டு மரம் நட்டு !!

தா வரம்
எனக் கேட்காது
ஆண்டவன் அளித்தது தாவரம் !!
வரவேண்டும் அதனை
பாதுகாக்கும் தீவிரம் !!

ஒதுங்கலாகாது இனியும்
ஒழியும் மரங்களை
ஒழுங்குற பாதுகாக்கும்
சித்தமின்றி !!
செய்திருக்கின்றார் ஒருவர்
செயற்கரிய ஒரு செயலை
சத்தமின்றி !!

நகர்த்துகிறார் அவர்
நண்பகலை
நடத்துனர் தொழிலில் !!
நலம் விரும்புகின்றார் நாளும்
நகரின் எழிலில் !!

நெஞ்சின் ஈரத்தில்
எஞ்சிய நேரத்தில்

மரத்தை வீழ்த்தாதே !!
மனிதனை துயரில் ஆழ்த்தாதே!!

என..
எடுத்துச் சொல்கின்றார்
பிஞ்சுக் கரங்களுக்கு !!
அது மட்டுமின்றி
அச்சிறார் பெயரை
அழகுற இடுகிறார்
அங்கிங்கெனாது
அவர் நடும் மரங்களுக்கு !!

தானாய் வருகிறது
பிள்ளைகளுக்கு நேசம் !!
தாயாய் மரத்தைப்
பார்க்கும் பாசம் !!

அனேக மரங்கள்
அழகுற பராமரிக்காததால்
அதாகப் பட்டது !!
அதாகப்பட்டது
அவரை அசாத்தியமாய் சுட்டது !!

வேண்டாம் இனியும்
வெட்டி எறிதல் !
இன்றைய தேவை
இயற்கை அறிதல் !!

என சொல்கின்றார்
எடுத்து !!
கேட்கிறார் சிறார்
செவி மடுத்து !!

யோக நாதன்
போன்ற சிலர்
உலகிற்கு உணர்த்தும்
உன்னதமான பாடம்....

மழை என்றால் பெய்யணும் !!
மனிதன் என்றால் செய்யணும் !!

Labels: , ,