Friday, August 06, 2010

இன்று போய் நாளை வா...



அயோத்தியினின்று
அசோக வனத்திற்கு
அடி பெயர்ந்தாள் கதை !!

”கோடு போட்டு நிற்கச் சொன்னால்
சீதை நிற்கவில்லையே” என
கவியரசர் அன்றே பாடினார்
கச்சிதமாய் அதை !!

இமயம் பெயர்த்த
இராக்கதன் இராவணன்

இன்னொருவன் மனையாளின்
இருள் கேசத்தில் வைத்தான்
இதயமெனும் நெஞ்சு !!

இறுதியாய் போரில் அவனுக்கு
இருடீகேசன் வைத்தான்
இரு மூக்கிலும் பஞ்சு !!

தனது அடுத்த
தமிழ்ப் படம்

”ராவணன்” என
ரத்னம் அறிவித்ததும்

பக்கபலமாய் தொழில் மேதைகள்
பலவாறு தோள் கொடுத்தார் !!
எண்ணிலடங்கா ரசிகர்
எப்போது வரும் என
எதிர்பார்ப்பில் முகம் கடுத்தார் !!

வில்லுக்கு பதில்
விறைப்பான காவல் துப்பாக்கி...
விறுவிறுப்புக்காக கதையையும்
வித்தியாசமாய் சற்று தப்பாக்கி...

வற்றிய வசனத்தோடும் ..
வழக்கமான இருளோடும்...

பாட்டிகளின் ஆட்டத்தோடும்..
முகில் மழை கூட்டத்தோடும்..

மண்ணில் ஒட்டா
மழை கணக்காய்..
இடுப்பில் நிற்கா சேலை
இழை கணக்காய்..

முன்னிலை இயக்குனரின்
முத்திரை இன்றி..
முதிர்ச்சி குன்றி...

திசை மாறிய
இசைப் புயலின்
பசை யற்ற மெட்டோடு...

புதுமை எனும் பெயரில்
புனைந்திருக்கிறார் மணிரத்னம்
புராணக் கிறுக்கல் !!
தெரிந்து தெளியாமையால்
தெரிந்தே தேடியிருக்கிறார் சறுக்கல் !!

கந்தசாமிக்கு பிறகு
கந்தலான தன் பெயரை
கரையேற்ற நினைத்த சீயான்

உவந்தார் முதலிடம் பிடிக்க !!
உடன்பட்டார் இதில் நடிக்க !!

”கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன் “
கம்பன் வாக்கு !!
விலாசமின்றி அவ்வழி போனது
விக்ரமின் போக்கு !!

வீணடிக்கப் பட்டதால்
வீழ்ந்து கிடக்கிறான் பிதாமகன்
”வீர(ரா)” நாயகனாய் !!

ரத்னத்தின் முத்திரையாய்
ரசிகனின் தேடல்



வேறொரு படத்தில்
வேடமிடுவாரா அவர்
"வேலு" நாயகனாய் ?!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home